ஏ.எம்.றிகாஸ்-
கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காப்பரண் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 01.12.2016 பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவையற்ற விதத்தில் மகாபொல கொடுப்பனவைத் தடைசெய்யக்கூடாது ,; விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 ஆம் 3 ஆம் வருட மாணவர்களுக்கு மீண்டும் விடுதி வசதி செய்யப்பட்வேண்டும் மற்றும் பரீட்சை முடிவுகள் உரிய காலத்தில் வெயிளிடப்படவேண்டும் என்பன இவ்வார்ப்பாட்டத்தின் ஏனைய கோரிக்கைகளாகும்.
மாணவர்கள் தமது கோரிக்கைளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.
அதனையடுத்து நிருவாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
கிழகுப்பல்கலைக்கழகத்தில் சிசிரீவி கெமராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் தமக்கு போதுமான சுதந்திரம் இல்லை என்றும் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இல்லாதவாறு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் பொலிஸ் காப்பரண் அமைக்கப்பட்டுள்ளதனால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் குறித்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபனிடம் கேட்டபோது - மாணவர்களது கோரிக்கைகள் இதுகாலவரை எழுத்துமூலம் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் பல்கலைக்கழக நிருவாகம் அதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.