வசந்தம் எப்.எம். அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய “இந்த காலைப் பொழுது” கவிதை தொகுதி நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு தபால் தலைமைக் கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணியும், கவிஞருமான ஜி.இராஜகுலேந்திரா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு, வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி முகாமையாளர் முருகேசு குலேந்திரன் முன்னிலை வகிக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சருமான கவிஞர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேஷன் மற்றும் உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அஸ்கர் எழுதிய “இந்த காலைப் பொழுது” கவிதை நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டத்தை இந்தியாவில் இருந்து வருகை தரும் தமிழ் சினிமா திரைப்பட இயக்குநர் மீராகதிரவன், பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் ஹஸீன் மற்றும் கவிஞர் அனார் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
நூலின் முதற் பிரதியை புரவலர் புத்தக பூங்கா நிறுவுனர் இலக்கிய புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொள்ளும் இந் நிகழ்வில், மேலும் தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குநர்கள், கலை இலக்கிய வாதிககள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்,
இந் நிகழ்வினை பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளரும் வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு நிறைவேற்று அதிகாரியுமான எம்.எஸ்.இர்பான் முஹம்மட் தொகுத்து வழங்குகிறார்.
எனவே தென்னிந்தியாவிலிருந்தும் மற்றும் எமது நாட்டிலுள்ள பல பிரபலங்களும் கலந்து கொள்ளும் இவ்விழாவுக்கு வருகை தந்து தங்களது ஆதரவையும் வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுக்கின்றனர்.
எம்.எஸ்.எம்.ஸாகிர்.
