எம்.ரீ. ஹைதர் அலி-
முஸ்லிம் மக்களுக்கெதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு ஆட்சி மாற்றத்தினூடாக மாத்திரம் தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி முன்னால் நகர முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகானசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு அநீதிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது அதிகமான இழப்புகளை எமது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டது. எமக்கான அரசியல் பலமோ அல்லது பாரிய ஆயுத குழுக்களோ இல்லாத அந்த வேளையில் எமது துஆக்களின் மூலமாகவே அத்தகைய சோதனைகளை வெற்றிகொள்ள முடிந்தது.
இருப்பினும் யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு இனவாத செயற்பாடுகள் இடம்பெற்றதனை அடுத்து சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ள போதும் தற்போது இந்த அரசாங்கத்திலும் அத்தகைய இனவாத செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவருகின்றது.
இந்நாட்டின் ஆட்சி என்பது தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்தினை திருப்திப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. ஆகவே ஆட்சிமாற்றத்தின் மூலம் மாத்திரம் எமது சமூகத்திற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது, இத்தகைய ஒரு சூழ்நிலையில் இறைவனிடம் அதிகமான பிராத்தனைகளை மேற்கொள்வதே எமக்கிருக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும் என தெரிவித்தார்.



