க.கிஷாந்தன்-
மோட்டார் வண்டியொன்றில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற இரானுவ வீரரொருவரை தாக்கி அவர் வசமிருந்த 43,750.00 பணத்துடன் குறித்த வாகனத்தையும் கடத்திச் சென்ற இரானுவ வீரர்கள் இருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
25.09.2016 அன்று அதிகாலை 2.30 மணியளவில், ஹப்புதளை பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி வந்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் வாகனத்தை பொரலந்தை ஹின்னாரங்கொல்ல பகுதியில் வைத்து வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தில் தாக்கப்பட்டவர் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை, சம்பவம் நடந்து குறுகிய நேரத்தில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் தியத்தலாவை இரானுவ முகாமில் கடமையாற்றி வரும் 31,39 வயதுடைய இரானுவ வீரர்கள் என பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வெலிமடை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.