கஹட்டோவிட்ட ரிஹ்மி -
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 10 இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஏற்ப, 2020 ஆண்டில் தகவல் தொழில் நுட்பத்திறன் வாய்ந்த இளைஞர் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன், அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் கருத்தின் படி "யொவுன் சவிய - 2016" தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழிற் திறன் விருத்தி செய்யும் வேலைத்திட்டம் அகில இலங்கை ரீதியில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது, தேசிய இளைஞர் சேவைகள் சபையின் பூரண வழிகாட்டலுடன் நடைபெறவுள்ளதுடன், இதற்காக பதிவு செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு ரூபா 25 000, பெறுமதியான கணனிப் பயிற்சிப் பாடநெறியொன்றை இலவசமாகத் தொடர்வதற்குரிய சந்தர்ப்பத்தைப் பெறுவதோடு, மற்றுமொரு பாடநெறியொன்றைத் தொடர்வதற்கு ரூபா 100 000 வரையான புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
"யொவுன் சவிய - 2016" வேலைத்திட்டத்தின் மூலம், இம்முறை க.பொ.த. உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களில் 25 000 பேர்களுக்கு இவ்வாய்ப்பினை வழங்குவதற்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி மொனராகலை, பிபிலையில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொழிற்பயிற்சிப் புலமைப்பரிசில் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல், ஆகஸ்ட் 30 ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டாரவின் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது. நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவரும், பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி எரந்த வெலியஅங்ககே உட்பட வேலைத்திட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.