நாமல் ராஜபக்ஷவின் வழக்கு தொடர்பான சந்தேகநபர்களில் ஒருவரான சுஜானி போகொல்லாகம, கைதாவதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் பொருட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சந்தேகிப்பதாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
நாமல் ராஜபக்ஷவின் என்.ஆர். கன்சல்டன்ட் மற்றும் கவர்ஸ் கோபரேஷன் ஆகிய நிறுவனங்களின் பிரதான நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு தொடர்பில் இன்றைய தினம் (19) கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, FCID இனர் இவ்வாறு தெரிவித்தனர்.
இதனை அடுத்து, குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்து எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி, அறிக்கை ஒன்றை வழங்குமாறு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.
சுஜானி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பில், குறித்த நிறுவனங்களின் மற்றுமொரு பணிப்பாளராக கடமை புரிந்த ஒரநெல்லா இரேஷா சில்வா எனும் சந்தேகநபர் வெளிநாட்டில் உள்ளதாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் தெரிவித்ததை அடுத்து, அவரை கைது செய்வதற்கான, சர்வதேச பொலிஸாருக்கான (Interpol) பிடியாணையை நீதிமன்றம் வழங்கியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில், அதன் மற்றுமொரு பணிப்பாளரான நித்யா சேனானி சமரவிக்ரம என்பவரை எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகவரை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தினகரன்