பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் நேற்றைய தினம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி பொதுபலசேனா அமைப்பு கிருலப்பனையில் பெளத்த மத்திய நிலையத்தில் நடாத்திய ஊடக மாநாட்டில் ஞானசார தேரர் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டும் புனித குர்ஆனை இலங்கையில் தடை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் விசாரணை நடத்தும்படி முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டினை பொரளை ஜும்ஆ பள்ளிவாசலின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உப தலைவருமான எம்.எம்.எம். ரிகாஸ் சட்டத்தரணி எம்.ஏ.எம். சித்தீக் ஊடாக சமர்ப்பித்துள்ளார்.
முஸ்லிம்களின் தற்பாதுகாப்பு கருதியும் இந்த முறைப்பாடு முன்வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி ஊடக மாநாட்டில் ஞானசார தேரர் புனித குர்ஆன் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் உலமா சபைக்கும் தேசிய சூரா கவுன்ஸிலுக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்பதை தாம் கற்பித்துத் தருவதாகவும் சவால் விட்டிருந்தார்.
ஞானசார தேரரின் இவ் உரை தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.