இன்று சில இனவாதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீதுள்ள பிரச்சினையை ஒரு பூதாகரமாக மாற்றி தங்களது கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை மீராவோடை பாடசாலை குறுக்கு வீதியில் வடிகானுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
முதலமைச்சர் கடற்படை அதிகாரியை தாக்கவில்லை, கெட்டவார்த்தைப் பிரயோகங்களால் திட்டவில்லை அவர் சொன்னவார்த்தை நீ நடந்து கொண்ட முறை பிழை என்றுதான். ஆனால் முதலமைச்சர் பிழையாக நடந்து கொண்டார் என்று கடந்த அரசாங்கத்தில் பொலிஸ் அதிகாரியின் சட்டையைப்பிடித்து இழுத்த விமல் வீரவன்ச இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்.
இதே போன்று கிழக்கு முதலமைச்சர் முப்படைக்கும் எதிரானவர் என்று சித்தரிக்கப்படுகின்றது. இதனை பயன்படுத்தி பெருமான்மை சமூகத்தைச் சேர்ந்த பௌத்த குரு முதலமைச்சரின் வீட்டுக்கு வந்து தன்னுடைய செயற்பாட்டை காட்டிய விதம் பௌத்த தர்மத்திற்கு மாற்றமான ஒரு செயலாகும் என தெரிவித்துள்ளார்.
பௌத்த குரு பிரயோகித்த வார்த்தைப் பிரயோகம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேவலப்படுத்தும் செயலாக அமைந்திருந்தது. இதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நாங்கள் பொறுமையாக இருப்பதால் கோழைகள் என்று எவரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்கள் இனத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக போராட தெரியும், ஆனால் பொறுமை காத்து செயற்பாடுகளை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளதால் அதனை கடைப்பிடித்து செயற்பட்டு வருகின்றோம் என கூறியுள்ளார்.
இவ்வாறான இனவாத செயற்படுகளை கடந்த அரசாங்கம் விட்டு வைத்திருந்ததால்தான் சிறுபான்மைச் சமூகம் ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பியது. அந்த நிலைமை மீண்டும் இந்த அரசாங்கத்திற்கு வந்து விடக் கூடாது.
நாங்கள் நல்லாட்சி மலர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தது மஹிந்தவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன வரவேண்டும் என்பதற்காகவல்ல. ஆட்சி மாறவேண்டும் சிறுபான்மை மக்களின் பிரச்சினை ஆட்சியாளர்களின் காதுகளுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினோம் என்றும் தெரிவித்தார்.