பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, குவைத்-
தற்போதைய தமிழக சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் மொத்தம் நான்குதான். அதிமுக கூட்டணியின் மூன்று கட்சிகளின் உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்கள் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றதால் அக்கட்சியின் உறுப்பினர்களாகவே நடத்தப்படுவர்.திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்கள் அந்தந்த கட்சிகளின் சொந்த சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரே ஒரு உறுப்பினராக இருந்தாலும் அவரும ஒரு கட்சியின் உறுப்பினராகதான் கணக்கில் வருமே தவிர கூட்டணி கட்சிகளின் தலைமை பொறுப்பேற்ற கட்சியின் உறுப்பினராக கருதப்பட மாட்டார்.
இந்தவகையில் வரலாற்று சிறப்பு மிக்க "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" கட்சி, திமுகவின் தலைமையில் சொந்த சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு உறுப்பினரை பெற்றுள்ளது.
இதைகூட தமிழக ஊடகங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் சட்டமன்றத்தில் மூன்று கட்சிகள்தான் உள்ளன என்ற பிரச்சாரத்தின் மூலம் தங்களின் ஊடக பயங்கரவாதத்தை துவக்கியிருப்பது மட்டுமல்லாமல் சிறுபான்மை சமுதாயத்தின் குரல் சட்டசபையில் இல்லை என்ற மாயத் தோற்றத்தையும் உருவாக்க முனைந்துள்ளன.
அதற்கான வடிவத்தை "புதிய தலைமுறை" தொலைக்காட்சி ஆரம்பம் செய்துள்ளது. இன்றைய (25/05/2016) "நேர்பட பேசு" நிகழ்ச்சியின் விவாத தலைப்பாக "சட்டமன்றத்துக்குள் மூன்றே கட்சிகள்" என்று பதிவிட்டுள்ளது. இதையே "சட்டமன்றத்துக்குள் மூன்றே எதிர்கட்சிகள்" என்று தலைப்பு கொடுத்திருந்தால் ஊடக தர்மம் சிறிதளவாவது காப்பாற்றபட்டிருக்கும்.
ஆரம்பத்திலேயே இந்த பயங்கரவாத செயலை நடுநிலையாளர்கள் கண்டிக்க தவறினால் வழமைப்போல் சிறுபான்மை சமுதாயத்தின் குரல்வளை நெறிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.