தேர்தல் மேடைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது போனால் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் தோல்வி நிச்சயம் என்று ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் சமூக சேவைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊழல் மற்றும் மோசடி சம்பவங்கள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியிருப்பது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றிடம் கவைல வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வர முன்னர் ஊழல், மோசடிகளை ஒழிப்பதாகவும், கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தது.
நானும் அது தொடர்பான பல்வேறு கோப்புகளை ஆதாரபூர்வமாக திரட்டி, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கையளித்திருந்தேன்.
அவ்வாறு கையளிக்கப்பட்ட கோப்புகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய பலரும் தற்போது பிணையில் இருக்கின்றனர். எனினும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் குறித்த வழக்குகளின் முன்னேற்றம் குறித்து பொது மக்களுக்கு சந்தோசமான தகவல்கள் கிடைக்கும்.
திருட்டு, மோசடி நடவடிக்கைகளில் தொடர்புடைய பலரும் தற்போது தாங்கள் சுற்றவாளிகள் போன்று காட்டிக்கொள்ள பிரயத்தனப்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் ஒரு காலம் வரும். அதன் பின்பு பொதுமக்கள் இது தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்வார்கள் என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
