சில ஊடகங்கள் செய்தியை புனைவதாக பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது அவருடன் சென்றிருந்த அமைச்சர் கிரியல்ல, ஊடகவியலாளர்களிடம் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த அரசாங்கத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊடகங்களுக்கு செய்தி இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சில ஊடகவியலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது சொல்லுங்கள் என கோருகின்றனர்.
தற்போது ஊடகவியலாளர்களுக்கு கேள்வி கிடையாது. வெள்ளை வான்களில் கடத்தப்படுவதில்லை. தாக்கப்படுவதில்லை. ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரத்தில் கட்டப்படுவதில்லை, கடத்தல்கள் கிடையாது, பிரதம நீதியரசர் விரட்டப்பட்டார், சரத் பொன்சேகா இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை.
அது நல்லது இல்லையா? அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளின் நிமித்தம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க உள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, செய்திகளை புனைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பிரதமர் சந்திப்பு நடத்தியமை குறித்து கேள்வி எழுப்பிய போது மஹிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் தனிப்பட்ட குரோதம் கிடையாது எனவும், மஹிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எதிரியல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
