பாறுக் ஷிஹான்-
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் முகமாக இன்று வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக, யாழ். மக்களின் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. இந்த ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வவுனியா, யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
யாழ்.வர்த்தகர்கள் இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் 10 மணி வரையான இரண்டு மணிநேரம் வர்த்தக நிலையங்களை மூடி இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவை வெளிப்படுத்துவர் என்று யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை எனினும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மட்டும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுகின்றன.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதோடு நாளை பல்கலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பரீட்சைகள் மாத்திரம் நடைபெறுவதுடன் ஏனைய வகுப்புக்களுக்கான மாணவர்கள் செல்லவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கிளிநொச்சியில் தனியார் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சில பாடசாலைகளுக்க மாணவர்கள் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் இயங்கவில்லைஅதேபோன்று வவுனியா மற்றும் மன்னாரிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.வங்கிகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டன, மேலும் உணவகங்கள், மருந்து கடைகளுக்கு விதிவிலக்களிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான உணவகங்கள், மருந்து கடைகள் திறந்திருந்தன.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனிமையிலிருந்த ஹரிஷ்ணவி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் பிரேத பரிசோதனைகளின் போது அவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றைய தினம் வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், வவுனியா மற்றும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது



