எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கந்தளாய் நிலைய பொறுப்பதிகாரி அலுவலகத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில், 'கடந்த அரசாங்கக் காலத்தில் அமைச்சர்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போதைய நல்லாட்சியின் கீழ் அமைச்சர்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி மக்களின் குறைகளை அறிந்து அமைச்சர்கள் சுயமாக செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில், எனது சேவை இம்மாவட்ட மூவீன மக்களையும் மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.' என்றார்.
வாண் எல மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வைக்கவுள்ளேன். அதேபோன்று, அக்கோபர பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையையும் தீர்த்து வைப்பேன்.
ஏதிர்காலத்தில் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நீர் விநியோகிப்பதற்கு எமது அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது' எனவும் அவர் மேலும் கூறினார்.


