இணைப்பு 03 அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள குறித்த நிறுவனத்தில் முகாமையாளராகப் பணியாற்றும் நற்பிட்டிமுனை மயான வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் 1.30 க்கும் 2.30 மணிக்குமிடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியின் தாயான ராஜேந்திரன் சுலக்சனா திலீபன் என்ற 33 வயதுடையவரே கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
வழமை போன்று சனிக்கிழமையும் காரியாலத்திற்குச் சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும்போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் போஷனத்திற்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கீழே கிடப்பது கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நீதிபதியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட உதவி முகாமையாளர் சுலக்சனா கடந்த 8 வருடங்களாக குறித்த நிதி நிறுவனத்தின் மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கல்முனையிலுள்ள அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
