நாட்டை பிளவுபடுத்தாது முழு நாட்டு மக்களது ஒத்துழைப்பையும் பெற்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இன்று காலை அலரி மாளிகையில் ஆற்றிய விஷேட உரையின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்;
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட இருப்பதாக சிலர் பொய்யான பிரச்சாரங்களை பரப்புகின்றனர்.
நானும் ஒரு இலங்கை பௌத்தன். இந்த நாட்டை ஒன்றுபடுத்தக் கூடிய தேவை எனக்கிருக்கின்றது. அந்த பொறுப்பையே பொதுமக்கள் எனக்கும் ஜனாதிபதிக்கும் வழங்கியுள்ளனர்.
அகவே நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையாது, 21ம் நூற்றாண்டிற்கு பொருந்தக் கூடியவாறான ஒரு அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தமது ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரது யோசனைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு முன்னோக்கிச் செல்ல நாம் தயாராகவே உள்ளோம்.
இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுடனும் வெவ்வேறாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
புதிய அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை இதன் பின்னர் தான் பொது மக்கள் கருத்துக்கள் ஊடாக தீர்மானிக்க வேண்டும்.
தொலைநகல், ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவுள்ளது.
உலகில் முதல் தடவையாக இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அரசியலமைப்பை உருவாக்கும் நாடாக இலங்கை அமையப் போகின்றது என பிரதமர் மேலும் தெரிவித்தார்
