போலி வாக்குறுதிகளை அள்ளி வீசும் முதலமைச்சரால் என்ன செய்ய முடியும்..? - கேட்கிறார் சபீஸ்

சப்றின்-
மூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல சாதாரண பாடசாலை மாணவன் முதல் அன்றாடம் கூலித் தொழில் செய்பவருக்குக் கூட இருந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அரச இயந்திரத்தின் செயற்பாடொன்று இருப்பதால் அதற்கமைவாக இதில் அரசியல்வாதிகள் முன்னிறுத்திப் பார்க்கப்படுகிறார்கள். 

துரதிஸ்ரவசமாக நமது சமூகம் ஒரு வரையறைக்கு அப்பால் சிந்திக்கக் கூடாது என்பதில் பதவியில் இருப்பவர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் எல்லோரும் வல்லவர்கள் அதில் இன்னார் சிறந்தவர் இல்லை என்றாலும் வகிக்கும் பதவி அவரவருக்கு அந்த வசதியை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது. 

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதவி ஏற்ற போது சில வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அரசியலில் ஈடுபட்டுள்ளவன் என்ற அடிப்படையில் அது தொடர்பில் எனக்குள் எழுந்த பல வினாக்களுக்கு விடை தேடிய போதிலும் உடனடியாக தரவுகளை முன்வைப்பதற்கு சூழ்நிலை என்னைத் தடுத்தது காரணம் நான் இன்னோர் கட்சிக்காரன். 

பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஒரு நிகழ்வில் அதே வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்ட போதும் சில மாகாண சபை உறுப்பினர்கள் வகை தொகை இன்றி அறிக்கைகள் மூலம் அளந்து விடுவதைப் பார்க்கையிலும் ஏற்பட்ட ஆதங்கத்தின் விளைவில் மக்கள் மன்றத்தில் எனக்குள் எழுந்த கேள்விகளை முன்வைக்கிறேன். 

முதலில் ஒரு மாகாண சபையின் மற்றும் முதலமைச்சரின் வரையறை என்ன? என்ற கேள்விக்கு விடையை ஒவ்வொருத்தரும் அறிந்து கொள்ளவேண்டும். 

இலங்கையில் 1987ம் ஆண்டு 8ம் மாதம் பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான கடமைகள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வரையறைக்கு ஏற்ப ஒரு முதலமைச்சரால் என்ன செய்ய முடியும்? முடியாது எனும் வரையறை உண்டு.

இதில் இந்தப் பதிவு மூலம் நான் முன்வைக்க விரும்பும் கேள்வி ஒரு மாகாண சபையின் நிதி உதவி எனும் விடயமாகும்.

எனவே கேள்வியைச் சுருக்கி ஒரு மாகாண சபை முதலமைச்சருக்குத் தன்னிச்சையாக நிதி உதவியாளர்களைத் திரட்டவோ அல்லது தமது மாகாணத்தில் செயற்படவோ அனுமதிக்கலாமா? என்று வரையறுத்துக் கொள்கிறேன் இதற்கான விடையை மேலே சொல்லப்பட்ட சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது. 

அதாவது குறிப்பிட்ட மாகாணம் தொடர்பான நிதி உதவிகள் ஆலோசனைகளை முதலமைச்சரோ அமைச்சர்களோ ஆளுநருக்கு தெரியப்படுத்தலாமே தவிர சுயமாக நிதியுதவியாளர்களைத் திரட்டவோ அனுமதிக்கவோ முடியாது.

மேலும் குறிப்பிட்ட மாகாணத்துக்குத் தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கு நிதிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதில் மத்தியவங்கி ஆளுநர், நிதிப்பிரிவுச் செயலாளர் இம்மாகாணத்தில் பெருவாரியாகக் காணப்படுகின்ற மூவின மக்களின் 3 பிரதிநிதிகள் போன்றோர் உள்ளடக்கப்பட்டு அவர்களால் அம்மாகாணுத்துக்கு தேவையான நிதியின் அளவு கணக்கிடப்பட்டதன் பின்னர் உரிய முறையில் மத்திய அரசாங்கத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் அதன்பிரகாரம் மாகாணத்தில் இருந்து கேட்கப்பட்ட நிதிப் பிரமாணத்தில் கொடுக்கக் கூடிய அளவு மத்திய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் என்பதே நடைமுறை ஆகும்.

ஆனாலும், துரதிஸ்டவசமாக சாதாரண மக்கள் இதைத் தேடி அறிந்துகொள்ள மாட்டார்கள் எனும் ஒரே தைரியத்தில் கிழக்கு மாகாண முதல்வரும் அவரது சகாக்களும் மேடைகளில் வெளிநாட்டு நிதி வரும். வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு வரப்போகிறோம் அதன் மூலம் இலட்சக் கணக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கப் போகிறோம் எனும் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாகாண அலகின் செயற்பாட்டுத் திறனை தனி மனித ஆளுமையாகவும், சிறப்புரிமையாகவும் சித்தரிப்பதன் மூலம் மக்களை மயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

துரதிஸ்டவசமாக கட்சிப் பாசத்தில் திளைத்திருப்பவர்களை சிந்திக்க வைக்க முடியாது.

ஆனாலும் சிந்திக்கத் தயாராக இருப்பவர்களிடம் இதைக் கேள்வியாக முன்வைக்கிறேன். சாதாரண ஒரு ஆசிரியர் அதிபர் இடமாற்றங்களைக் கூட செய்ய முடியாமல் ஆளுநரின் தயவுக்கு காத்திருக்கும் இவர்களால் இவ்வாறான அறிக்கைகளை விடும்போது தமது இஹ்லாசை எங்கே தொலைக்கிறார்கள்? அல் குர்ஆனும், ஹதீசும் 'வழிகாட்டியென' பறைசாற்றுகின்ற போதிலும் அஹ்லாக்கில்லாமல் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

முதலமைச்சர் தான் பதவி ஏற்றபோது சொன்னபடி இதுவரைக்கும் ஒருமுதலீட்டாளரைக் கூட கொண்டுவரவோ ஆகக் குறைந்தது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுனாமி வீட்டுப் பிரச்சினை, வட்டமடு காணிப் பிரச்சினை மற்றும் கடல் வளங்களில் மீனவர்களுக்கு உள்ள தடைகள் போன்ற ஆக்கபூர்வமான 'பேசித் தீர்க்கக் கூடிய' விடயங்களில் கூட உங்களால் கவனம் செலுத்த முடியாமல் போனதேன்? என்பதை அடுத்த தேர்தல் வரும் போது சில நாட்கள் நினைவில் வைத்து பின் உடனடியாக மறந்துவிடும் மக்கள்தான் இதற்கு பொறுப்பாளிகளா என்றும் கேட்கத் தோன்றுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -