பி.எம்.எம்.எ.காதர்-
இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் கல்வியாகும்.கல்வி என்ற இந்த ஆயுதத்தின் மூலம்தான் இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பது வரலாறாக மாறியிருக்கின்றது என விளையாட்டுப் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்
பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலயத்தை 6ஆம் ஆண்டுக்கு தரம் உயர்த்திய நிகழ்வு செவ்வாய்க்கிழமை (05-01-2016) பாடசாலை அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாடசாலையைத் தரமுயர்த்தி வகுப்பறையைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அதிதிகளாக கலாநிதி அஷ்சேய்க் எம்.எல்.முபாறக் மதனி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.எ.றஹீம், பி.எம்.யஸீர் அரபாத், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னாள் தலைவர் வை எல்.அன்சார் தற்போதயத் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக். விவாகப் பதிவாளர் எம்.எம்.உதுமாலெப்பை, அக்பர் சமூக ஒன்றியத்தின் தலைவர் அஷ்செய்க் யூ.எல்.எம்.சஜீத், ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றும் அனுசரணை வழங்கிய அக்பர் சமூக ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர.
இங்கு பிரதியமைச்சர் ஹரீஸ் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-
இன்றைய நல்லாட்சியில் கல்வித்துறைக்கு முன்னுரிமை கொடுத்து கிராமப்புற பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகையான நிதிகள் ஒதுக்கப்பட்டள்ளன. அந்த வகையில் தேசிய பாடசாலை மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடின்றி கூடுதலான அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ன.
இந்தத் திட்டத்தின் கீழ் இன மத பிரதேச வேறுபாடுகளின்றி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் முதல் கட்டமாக பல பாடசாலைகளைத் தெரிவு செய்து முன்மொழிந்திருக்கின்றோம் படிப்படியாக ஏனைய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்படும் வளர்ந்த பாடசாலைகளுக்கு சமமாக சிறிய பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும்.
அந்த வரிசையில் சுனாமி அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களைக் கொண்ட இந்தப் பாடசாலையும் அபிவிருத்தி செய்யப்படும் சுனாமியில் பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் கல்வியை கட்டியெழுப்பவேண்டும் என்பதில் நான் மிகவும் அக்கறையாகச் செயற்படுகின்றேன் அந்த வகையில் அக்பர் பாடசாலையின் முக்கிய தேவையாக இருக்கம் மூன்று மாடிக்கட்டத்திற்கான நிதியைப் பெற்றுத் தருவேன்.ஏனைய அபிவிருத்தியிலும் என்னால் செய்யக் கூடிய அனைத்து விடையங்களையும் செய்து தருவேன்.
கல்வி என்பது நமது ஈமானைக் கூட பலமாக வைத்திருப்பதற்கான காரணியாக இருக்கிறது. நாங்கள் புனித அல்குர்ஆனை ஓதி அதன்படி நடந்தால் இன்னும் எமது ஈமான் பலமாகும். இன்று உலகத்திலே பல நாடுகளில் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது இறைவனுக்கு அஞ்சி அவன் கட்டளைப்படி நாங்கள் நடக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
கல்முனை மாநகர அபிவிருத்தி எல்லாச் சமூகங்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எல்லோரையும் அரவணைத்து இந்த அபிவிருத்தியைச் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கின்ற வேளை தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட சிலர் இன்று தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் முஸ்லிம் மக்கள் மட்டும் அவர்களுடைய பிரதேசத்தை மட்டும் அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விடுகின்றார்கள்.
நாங்கள் தமிழ் பிரதேசங்களை விட்டு விட்டு முஸ்லிம் பிரதேசங்களை மட்டும் அபிவிருத்தி செய்தால் நாளை பாராளுமன்றத்தில் பேசுவார்கள் நகர அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா உரியது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா அபிவிருத்தி தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி இல்லையா தமிழ் மக்களை புறக்கணித்து விட்டார்கள் என்று.
இன்று வெளி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பஸ்களில் மக்களை ஏற்றி வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் கல்முனையின் அபிவிருத்தியை பிற்போடுவதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சதியாகும்.கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக எமது தலைமை தமிழ்த் தலைமைகளுடன் பேசியிருக்கின்ற நிலையில் சிலரின் இந்த நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் மீண்டும் மனக்கசப்புக்களை தோற்றுவிக்கும் என கவலைப்படவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
பிரதம அதிதி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச். எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு
அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார், விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களுக்கு பாடசாலை அதிபர் ஏ.எம்.ஜிப்ரி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.





