நிஸ்மி-
பாடசாலைகள் மகிழ்ச்சிகரமாக கற்கும் இடங்களாக இருக்க வேண்டும்.. இவ்வாறான சூழலை ஏற்படுத்தி மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் கற்பதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்து வருகின்ற இப் பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் தொடர்ச்சியாக செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் சிறந்த ஒழுக்கமும், ஆளுமையும் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று தேசியக் கல்லூரியின் அதிபரும், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான எம்.ஐ.எம்.சஹாப்தீன் தெரிவித்தார்..
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (21) வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஸெய்னுதீன் தலைமையில் இடம் பெற்ற தரம் - 03 முதன்மை நிலை-02 மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இந் நிகழ்வில் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எல்.மன்சூர்,எம்.றபீக், ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று தேசியக் கல்லூரியின் அதிபரும், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான எம்.ஐ.எம்.சஹாப்தீன். ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.ஏ.ஜவாத், பட்டியடிப்பிட்டடி ஜும்ஆப் பள்ளியின் முன்னாள் தலைவரும், சமூகசேவையாளருமான அல்-ஹாஜ் ஏ.எம்.எம்.சஹீத் ஜே.பி, பாடசாலையின் பிரதி அதிபர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.,
நிகழ்வில் மாணவர்களின் ஆக்கங்களின் கண்காட்சியுடன் பலகாரம் உட்பட பல்வேறு தேசிய உணவுப் பொருட்கள் (திண்பண்டங்கள்) அதிதிகளுக்கு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் நடைபெற்ற தரம்–05 புலமைப்பரிசில் பரீட்சையில் இப் பாடசாலையிலிருந்து தோற்றி சித்தியடைந்த எம்.எச்.லீனா ஸைனப் (179), ஏ.எச்.ஹிஸ்மா (152) ஆகிய மாணவர்களுக்கு பட்டியடிப்பிட்டடி ஜும்ஆப் பள்ளியின் முன்னாள் தலைவரும், சமூகசேவையாளருமான அல்-ஹாஜ் ஏ.எம்.எம்.சஹீத் ஜே.பி அவர்களினால் பணப் பரிசு வழங்கி பாராட்டப் பட்டார்கள்.
சங்கீத ஆசிரியை எம்.எல்.றஸீதா அவர்களினால் நெறிப்படுத்தப்பட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.




