ஓராண்டு கால ஆட்சியில் நாட்டுக்கு பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசியல், பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடந்த ஓராண்டு காலமாக நாடு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது.
இந்த அரசாங்கம் நீண்ட காலம் ஆட்சி நடாத்தக் கூடிய சாத்தியங்கள் கிடையாது. இந்த அரசாங்கத்தின் திருமண பந்தம் நீண்ட காலத்திற் நீடிக்க வாய்ப்பில்லை.
வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் தயாரித்தார், நிதி அமைச்சர் வாசித்தார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த வரவு செலவுத் திட்டத்தின் சிறகுகளை வெட்டினார். இதுவே இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது என்பதற்கான சிறந்த உதாரணமாகும்.
இந்த அடிப்படையில் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சியோ அல்லது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியோ ஆட்சி அமைக்க வேண்டும்.
இரண்டு பக்கங்களுக்கும் இழுக்கும் இவ்வாறான ஓர் அரசாங்கத்தை அமைப்பதில் அர்த்தமில்லை என அவர் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
