ஜனாதிபதியும், அரசும் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத நிலையில் ஒருவருடத்தைப் பூர்த்திசெய்துள்ளது என குற்றம் சாட்டும் ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மொஹமட் மிப்லார், இந்நிலை தொடர்ந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மொஹமட் மிப்லார் மேலும் தெரிவித்திருப்பதாவது,
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுத்த பொதுபலசேனா தடைசெய்யப்படுமென்றும் வாக்குறுதி வழங்கப்பட்டது.
அத்துடன் வடக்கில் முஸ்லிம், தமிழ் மக்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கும் தொழிலை முன்னெடுக்கலாம். அதற்கு தடைவிதிக்கப்படமாட்டாது என்றும், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்படுவார்கள் என்றும் சிறுபான்மையினத்தவர்களுக்கு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன.
ஆனால் இன்று இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்த இரண்டு விடயங்கள் மட்டும் தான் நிறைவேறியது. அதைவிடுத்து தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
இலங்கை அரசியலில் சிறுபான்மை இன மக்களை ஏமாற்றி பெரும்பான்மை இனத்தவர்கள் ஆட்சியை கைப்பற்றுவதே மரபாக இருக்கின்றது. இன்றும் அதே மரபையே பின்பற்றுகின்றது. ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் முஸ்லிம்களும், தமிழர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
எனவே இனிமேலும் சிறுபான்மை இன மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது கைவிடப்பட வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் எமது மக்களை ஏமாற்ற முடியாது. எனவே இனியும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். ஒருவருடம் பூர்த்தியின் பின்னராவது முஸ்லிம்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவும்.
தாஜுதீனின் கொலையும் அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இன்று அக் கொலையும் மூடி மறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது என்றும் மொஹமட் மிப்லார் தெரிவித்துள்ளார்.
