வலம்புரி கவிதா வட்டத்தின் 23வது பௌர்ணமி கவியரங்கு கொழும்பு 12 அல் ஹிக்மா கல்லூரியில் 24-12-2015 வியாழக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார். அங்கையன் கைலாசநாதன் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலாபூஷணம் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் சிறப்பதிதியாக கலந்து மறைந்த அங்கையன் கைலாசநாதன் பற்றி சிறப்புரையாற்றினார்.
வதிரி.சி.ரவீந்திரன் சிறப்புரையாற்ற வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது அவரது மைத்துனர் டாக்டர் கார்த்திகேசு சிவானந்தன் அவர்கள் காலமான செய்தி அவருக்கு கிடைத்தது. எனினும் வகவத்திற்கு வந்து சிறப்புரையாற்றுவேன் என்று தந்த வாக்கை காப்பாற்றவேண்டும் என்பதற்காக வகவ நிகழ்வினில் பங்கேற்றார். அன்னாரின் மைத்துனருக்காக வகவம் மௌனப் பிரார்த்தனை புரிந்தது.
கவிஞர் ஈழகணேஷ் வரவேற்புரையையும் கவிஞர் மேமன் கவி நன்றியுரையும் வழங்கினர்.
சிறப்பதிதி ரவீந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில் 'மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி கவிதை பாடியவர் அங்கையன் கைலாசநாதன். பேராதனை பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியான கைலாசநான் கவிதையோடு நாவல்துறையிலும் பத்திரிகை துறையிலும் ஈடுபட்ட ஒருவர். பேராதனைப் பல்கலைக் கழக குறு நாவல் போட்டியில் பரிசு பெற்றார். பிறகு இது இவரால் நூலாக வெளியிடப்பட்டது.
மீனவர் வாழ்வைப் பற்றி இவரே முதலாவது நாவலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 38 கவிதைகள் அடங்கிய 'அங்கையன் கவிதைகள்' நூலை 2002ல் வெளியிட்டார். அத்துடன் மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலே அதிக நாட்டம் உள்ளவராகவும் விளங்கினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் மெல்லிசைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியபோது அத்துறையிலே பிரபலம் பெற்ற முக்கிய சிலருள் கைலாசநாதனும் இருக்கிறார். வானொலி மெல்லிசைப் பாடல்களுக்கு களம் அமைத்த பெருந்தகை காலஞ்சென்ற எச்.எம்.பி.மொஹிதீன் என்பதையும் கட்டாயம் ஞாபகப்படுத்தவேண்டும்.
ஈழநாடு துணை ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் கடமை புரிந்த கைலாசநாதன் சமூகதீபம் காலாண்டு சஞ்சிகையையும், சாம்ராஜ்யம் என்ற சஞ்சிகையையும் நடாத்தியுள்ளார். இலங்கை வானொலியில் நாடக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். மொழிபெயர்ப்புத்துறையிலும் அங்கையன் ஈடுபாடு காட்டியிருக்கிறார். 38 வருடங்களே வாழ்ந்த அங்கையன் கைலாசநாதன் ஈழத்து இலக்கியத்துறையிலே தனது பெயரை தடம் பதித்து சென்றுள்ளார்' என்று குறிப்பிட்டார்.
கலாபூஷணம், சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனியின் தலைமையில் மிகவும் சுவையாக நடந்த கவியரங்கில் கவிஞர்கள் பிரேம்ராஜ், மட்டக்களப்பு லோகநாதன், வெளிமடை ஜஹாங்கீர், இப்னு அஸூமத், எஸ்.ஜனூஸ், பாணந்துறை நிஸ்வான், சமூகஜோதி எம்.ஏ.ரபீக், சங்கர் கைலாஷ், கலைக்கமல், சுஹைப் எம். காசிம் ஆகியோர் விதவிதமான கவிதா ஆற்றலால் சபையை கவர்ந்தனர்.
தற்போது மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அங்கு நடைபெற்ற உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் வலம்புரி கவிதா வட்டத்தின் பணிகள் குறித்து உரையாற்றியதும் சபைக்கு அறிவிக்கப்பட்டது. கவிஞர் தாசிம் அகமதுவும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வகவம் குறித்து எடுத்துரைத்ததை குறிப்பிட்டதோடு சில இலக்கிய தகவல்களையும் தெரிவித்தார்.
சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி அவர்களால் எழுதப்பட்டு மிக விரைவில் வெளியீட்டு விழா காணவுள்ள 'மாநபி பேசாத மௌன மொழி தமிழ்' என்ற நூலினை முதன் முதலாக வகவ உறுப்பினர்களின் முன் நூலாசிரியர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
கலா விஸ்வநாதன், த. மணி, பஸ்லி ஹமீத், சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், ஏ.எம்.எஸ்.உதுமான், ரஷீத் எம் றியாழ், ஏ.எச்.எம்.அத்தாஸ், எஸ்.நிஹார், ரமீஸா இம்தியாஸ், சனா எம். யெஹ்யா, சாதிக் ஷிஹான், கவிநேசன் நவாஸ் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
