அபு அலா –
ஒரு கோடி 80 இலட்சம் நிதியில் மூன்று மாடிக்கட்டிடம் அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா இன்று (24) வித்தியாலத்தின் அதிபர் ஏ.எல்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
என்னை சுகாதார அமைச்சராக்கி அழக பார்க்கும் உங்களின் பிள்ளைகளின் கல்வி நிலையை உயரத்த வேண்டிய பாரிய பங்கும், தேவையும் எனக்குள்ளது. அதற்காக நான் என்றும் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.
இந்த வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் திறமைவாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு என்னாலான என்னென்ன உதவிகளை செய்யமுடியுமோ அந்த உதவிகளை நான் செய்யத் தயாராகவுள்ளேன். இதற்கு இப்பாடசாலையிலுள்ள அதிபர் ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் உறுதுணையாக என்னுடன் இருக்கவேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இப்பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நாட்டி இக்கட்டிடத்தை எழுப்புவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் நான் செய்வேன். அத்துடன் உங்களின் பிரதேசத்தில் காணப்படும் ஆயுள்வேத மருந்தகம் மற்றும் மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவரத்தி செய்வதற்காக 50 இலட்சம் பணத்தையும் ஒதுக்கீடு செய்துள்ள அதேவேளை நோயளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக 12 கட்டில்களையும் வழங்கியுள்ளேன் என்றார்.






