சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்த மாணவன் இம்ரான் விஷ பூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த மாணவர் இம்ரான் வயது 17 ஆகும். திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வரும் ஜாபர் என்பவரின் மகனாவார். புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த இம்ரான், விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.
சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதில் தாங்கல் பகுதி கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இம்ரான் உள்ளிட்டவர்கள் களம் இறங்கினர். ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மீட்பு பணியில் இருந்த இம்ரானை வெள்ளநீரில் வந்த விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இம்ரான் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் இம்ரான் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கியவர்களை தன்னுயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்ட மாணவன் இம்ரான் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
