மு.இ.உமர் அலி-
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு வீடு பூசுவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித் தொகைக்கான பொருட்களை வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட வீடமைப்பு அதிகாரி ஜனாப். ஏ. அஸீஸ் அவர்களது தலமையில் 30.11.2015 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசால் காசிம் அவர்கள் மக்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் 'இந்த அரசாங்கம் ஏழை மக்களது வாழ்க்கைத் தரத்தினை அதிகரிப்பதற்கு மிகவும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது.
அரசு ஒரு வீடமைப்பு திட்டத்தினையும் அமுல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன. ஆனால், வீடுகளை கட்டுவதற்கு உரிய இடங்கள் நிந்தவூர் போன்ற இடங்களில் அடையாளம் காண்பது கஸ்டமாக இருக்கின்றது.' மேலும், சுகாதார அமைச்சு தொற்றாத நோய்கள் விடயத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது.
எனது பிரதேச மக்களாகிய உங்களுக்கு நான் அவற்றை சொல்ல வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளேன். உங்களது உணவுப் பழக்கவழக்கம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். செயற்கை உணவுகளை விட இயற்கையாக கிடைக்கும் உணவு வகைகளை உட்கொள்வதில் நீங்கள் ஈடுபடவேண்டும் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. ஆர்.யு.ஜெலீல் அவர்களும் வீடமைப்பு அதிகாரியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

