இதுவரை காலம் சம்பிரதாய முஸ்லிம் பிரமுகர் ஒருவரின் கட்டடத்தில் இயங்கி வந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமைக்காரியாலயம் மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்துக்கு அருகாமையில் இடமாற்றப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்படுவதற்கு நிதி எங்கிருந்து கிடைத்தது என பொதுபல சேனா அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்குறிப்பிட்டவாறு கேள்வியெழுப்பினார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, உலமா சபையின் ஹலால் பிரிவுக்காக கொள்ளுப்பிட்டி அல்பிரட் பிரதேசத்தில் காரியாலயம் ஒன்றும் கண்டியில் ஒரு கிளைக் காரியாலயம் நிறுவுவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் நிதி எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் உலமா சபை வெளிப்படுத்த வேண்டும்.
இந்நாட்டில் இஸ்லாமிய தூதுவராலயங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பே இஸ்லாமிய வணக்கஸ்தலங்கள் அதிகரித்துள்ளன. முஸ்லிம் கிராமங்களில் ஒரே வடிவத்தில் அமைந்திருந்த பள்ளிவாசல்கள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதாக நவீன மயப்படுத்தப்பட்டுள்ளன.
கிராமத்தில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு ஜும்ஆ தொழுகையே நடாத்தப்பட வேண்டுமேன இஸ்லாம் தெரிவித்திருந்தாலும் இன்று ஒரு கிராமத்தில் பல பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்படுகிறது. இவ்வாறு பல கொள்கைகளை கொண்ட பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் குருநாகலில் இடம்பெற்ற இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கிடையிலான மோதல்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும். பிரிவினை வாதத்தை உருவாக்கும் பள்ளிவாசல்களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இவ்வாறான பள்ளிவாசல்களை நபிகள் நாயகம் அழித்துள்ளார்கள் என்றே குர்ஆன் தெரிவித்துள்ளது.
கிண்ணியாவில் இலங்கையிலேயே பெரிய பள்ளிவாசலொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசலின் திறப்பு விழாவிற்கு மக்காவின் பிரதம இமாம் ஒருவரே வருகைத் தந்திருந்தார்.
பள்ளிவாசல்களை நிறுவிக் கொள்ளும் முஸ்லிம்கள் கல்வி போதிப்பதற்கு பாடசாலைகள் எதனையும் நிறுவவில்லை. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை சம்பிரதாய முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது.
இந்தச் சேவை இன்று வஹாபிஸத்தையும் சலபிவாதத்தையும் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது.
அகில இலங்கை தெளஹீத் ஜமாஅத் மற்றும் அல் முஸ்லிமாத் எனும் நிகழ்ச்சி நிரல்கள் இச்சேவையில் ஒலிபரப்பப்படுகின்றன.
மத மாற்றங்களைச் செய்வதற்காக நிதா பவுண்டேசன் முஅல்லபதுல் எனும் நிகழ்ச்சி ஒன்றும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது என்றார்.
