இந்நாட்டின் நல்லாட்சிக்காக பாடுபட்டு உழைத்த பெருமதிப்பிற்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்கள் இன்று மரணமடைந்துள்ளார். அன்னாரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஜனாப்.கே.எம்.கபீர் மற்றும் அதன் செயலாளர் ஜனாப்.எஸ்.ஆப்தீன் ஆகியோர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நாட்டில் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியொன்றினை உருவாக்குவதற்காக மிகவும் துணிச்சலான முறையில் பல்வேறு உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது செயற்பட்டு, ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்திய பெரும் மகான் மாதுலுவாவே சோபித தேரர் ஆவார்.
இந்நாடு சகல இன மக்களையும் கொண்ட பன்மைத்துவ கலாசார நாடாகும். நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் ஆகிய பண்புகளின் அடிப்படையில் இந்நாடு கட்டியெழுப்பப் படவேண்டுமெனவும், ஊழல், கொலை, கொள்ளை, போதைப்பாவனை, குடும்ப ஆட்சி, அரசியல் அடக்குமுறை, சர்வதிகாரம் போன்ற மிக மோசமான பண்புகளையுடைய கலாசாரம் அழிக்கப்படவேண்டுமென்ற கொள்கையுடன் செயற்பட்ட மிகவும் முன்மாதிரியான மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் இழப்பானது எமக்கு கவலை தருவதாகவே உள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அன்னாரின் இழப்பினால் அவதியுறும் அவரது குடும்பத்திற்கும் மக்களுக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமானால், என்ன நோக்கத்திற்காக மாதுலுவாவே சோபித தேரர் அவர்கள் ஆட்சி மாற்றம் வேண்டி உழைத்தாரோ, அந்நோக்கங்கள் நிறைவேறும் வகையில் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் அரச இயந்திரத்தை முன்கொண்டு செல்ல வேண்டியது அவர்களது தார்மீகப் பொறுப்பாகும் எனவும் அவர்கள் தமது அனுதாபச் செய்தியில் வலுவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
