நிஸ்மி-
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற பிரதேசங்களில் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தின் கீழான சுத்திகரிப்பு வேலைகளின மூன்றாம் நாள் நிகழ்வுகள் கடந்த (17) சனிக்கிழமை அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகள் இணைந்து அன்று காலை நடாத்திய இச் சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபை, மாநகர சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களும், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் பேரில் எதிர்வரும் பருவ மழையைக் கருத்தில் கொண்டு கொடிய டெங்கு மற்றும் வெள்ளம் முதலியவைகளிலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடிகான்கள் துப்பரவு செய்து தூர்ந்து போன வடிகான்களை ஆழமாக்கல், பொது இடங்கள், வீதியோரங்கள், பொதுச் சந்தை மற்றும் பஸ் நிலையங்கள் முதலியவற்றில் இச் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அக்கரைப்பற்று – அம்பாரை வீதியில் பள்ளிக்குடியிருப்பு 02 வது மைல் சந்தியில் அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சலாஹுதீன் தலைமையில் இடம் பெற்ற இச் சுத்திகரிப்பு பணியின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்கள் கலந்து கொண்டு சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இச் சுத்திகரிப்பு பணிகளில் அக்கரைப்பறறு பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சலாஹுதீன், ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளர் திருமதி. வுp.கமலநாதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மாநகர, பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்குடியிருப்பு 02 வது மைல் சந்தியில் ஆரம்பித்து பட்டியடிப்பிட்டி பாலம் வரை வடிகான்கள் துப்பரவு செய்து தூர்ந்து போன வடிகான்களை ஆழமாக்கியதோடு;, பொது இடங்கள், வீதியோரங்கள் இருமருங்கும் இச் சுத்திகரிப்பு பணியின்போது சுத்திகரிக்கப்பட்டது.


