ஜுனைட்.எம்.பஹ்த்-
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமாகிய மஸ்ஜிதுல் அக்ஸா யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்து விட்டன. சர்வதேச அமைப்புகள் ஜக்கிய நாட்டு தாபனம் போன்ற சர்வதேச நிருவனங்கள் காலாகாலம் கூட்டங்கள் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றிய போதிலும் அவை செயற்படுவதாகத் தெரியவில்லை.
புனித பூமியை ஆக்கிரமித்துள்ள யஹுதிகள் மஸ்ஜிதுல் அக்ஸாவின் கீழ் பகுதியில் சுரங்கம் அமைத்தும் பலஸ்தீன அப்பாவி மக்களுக்கு படுபாதகமான
அநியாயங்களை செய்தும் வருகின்றனர். தற்போது கட்டுக்கடங்காது சிறுவர், சிறுமியர் என்று பாராது அவர்கள் செய்யும் அநியாயங்களும் கொடுமைகளும் மனித உள்ளம் தாங்காதவையாகும்.
இஸ்ரேல் என்ற இடமே இல்லாதிருந்த வேளையில் பலஸ்தீனத்திற்குள் வந்து
செல்வதற்காக அனுமதி பெற்று அங்கே நுழைந்த யூதர்கள் அப் புனித பூமியை ஆக்கிரமித்து பலஸ்தீன மக்களுக்கு கொடுமைகள் செய்துவருகின்றனர்.
நாட்டின் எல்லைகளைப் பிடித்து மக்களை அடக்கி முழு உலக முஸ்லிம்களதும் புனித சொத்தான மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமித்ததோடு அவர்கள் விரும்பியவாறு அதை மூடிவிடவும் செய்கின்றனர்.
இதனை எதிர் கொண்டு போராடும் பலஸ்தீன மக்களது விடுதலைக்காகவும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் வெற்றிக்காவும் சகல முஸ்லிம்களும் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
விசேடமாக எதிர்வரும் முஹர்ரம் 09, 10 ஆகிய தினங்களில் தாஸஆ, ஆஷுரா நோன்பு நோற்கும் அனைத்து மக்களும் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்,
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
