ஜூன் 2014இல் அளுத்கம நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்த அங்கு முகாமிட்டிருந்த இராணுவத்தினர் 16 மாதங்களின் பின் நேற்று அங்கிருந்து முற்றாக வெளியேறினர்.
இவர்கள் அங்கு நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் முகமாக அளுத்கம அபிவிருத்தி மன்றம் நகர மக்களுடன் இணைந்து அவர்களுக்கு இராப்போஷண விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் அளுத்கம பிரதேசத்தில் பேருவளை, தர்ஹா நகர், வெலிபென்ன பகுதிகளில் வன்செயலால் பாதிக்கப்பட்ட வியாபாரக் கட்டடங்கள், வீடுகள் போன்றவற்றை புனர்நிர்மாணம் செய்ய முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களின் பணி மிகவும் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செய்யப்பட்டதைப் பாராட்டியே இந்தப் பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அளுத்கம அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஹுசைன் ஷாதிக் தெரிவித்தார்.
நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த முப்படை வீரர்கள் 600 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் பரிசுகளும், உயரதிகாரிகளுக்கு நினைவுக் கேடயங்களும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
