இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவினை பலப்படுத்திக் கொள்ளும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி ஆகியோருடன் இடம்பெறவுள்ள இச்சந்திப்புகளின் பின்னர் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
அத்துடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெற்றோலிய வள அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பிரமுகர்களுடனும் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்டோரும் கலந்துகொள்வர்.
தேசிய அரசாங்கத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகவே இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 195 என்ற விமானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.45மணிக்கு புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்களை இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரவேற்றார்.
இதன் பின்னர் மாலை 6.15க்கு புதுடில்லி சர்தார்பட்டேலில் அமைந்துள்ள தாஜ் பெலஸ் ஹோட்டலுக்கு வருகைதந்த பிரதமருக்கும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவுக்கும் விஷேட வரவேற்பு நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.
இங்கு ஹோட்டல் முகாமைவத்துவம் சார்பில் வரவேற்களிக்கப்பட்டதுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சார்பில் சிறுவர்களால் வெற்றிலை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை 8.20 மணிக்கு புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்.
இதன் பின்னர் காலை 10.00 இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் தாஜ் பெலஸ் ஹோட்டலில் சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை பிரதமரின் தலைமையில் இடம்பெறும்.
இதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
சுஸ்மா சுவராஜூடன் பேச்சுக்களை மேற்கொள்ளும் பிரதமர் தலைமையிலான இலங்கைக் குழு, 11.30 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விஷேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எசல வீரக்கோன், பிரதமரின் ஊடக மேலதிக செயலாளர் சமன் அத்தாவுட ஹெட்டி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேனியல் அல்போன்சஸ் ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
