இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் நாளை காலை கூடுகிறது. காலை 9.30 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் முதலில் பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி சபாநாயகரைத் தெரிவு செய்வார்கள் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்றும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தெரிவு செய்யப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் தெரிவை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பாக பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள். இதேவேளை பிற்பகல் 3மணிக்கு சபை ஒத்திவைக்கப்டபவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் அமர்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான வைபவரீதியலான அமர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கூடவுள்ள புதிய பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் முன்பகுதியில் ஆசனம் வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
