முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பலிகொடுப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மகிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் சிறப்புரிமை வசதிகளுடன் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால், ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்படும் என தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.
இந்தநிலையில் இதற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் இன்றைய தினம் எதிர் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மகிந்த ராஜபக்சவை கொலை செய்யும் திட்டத்தை செயற்படுத்தவே அவரது பாதுகாப்பை குறைக்க எதிர்பார்த்துள்ளனர். அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத காரணத்தினால் இந்த சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகரான சிறப்புரிமைகளுடன் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு உயிராபத்து இருக்கலாம் என கருதுவதால், அதனை எதிர்க்கவில்லை.
சுவரொட்டிகளில் மக்கள் விடுதலை முன்னணி மனச்சாட்சியை பற்றி குறிப்பிட்டிருந்தாலும் அந்த கட்சி உண்மையான மனச்சாட்சி இல்லை என்பது இவ்வாறான செயல்கள் மூலம் தெளிவாகியுள்ளது. அத்துடன் இப்படியான கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியிடம் கேட்டுக்கொள்வதாகவும் மொஹமட் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
