தண்ணீரின் கனதி மற்றும் அதில் அடங்கியுள்ள உலோக, இரசாயன கலவை காரணமாக ஏராளமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதவாச்சிக்கு அருகிலுள்ள நேரியகுளம் என்ற இவ்வூரிலும் இதனைச் சூழவுள்ள அயல் கிராமங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த இந்தக் கிராமத்துக்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்ஓ இயந்திரத்தை பொருத்தி, அதனூடாக சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் திங்கள்கிழமை (01) மதவாச்சி பிரதேசத்தில் சிறுநீரக நோயைத் தடுப்பதற்காக நேரியகுளம் பள்ளிவாசல் எல்லைக்குள் நீர் சுத்திகரிப்பு ஆர்ஓ இயந்திரத் தொகுதியையும், நீர்த் தாங்கியையும் மக்கள் பாவனைக்கு கையளித்த பின்னர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மக்களின் பிரச்சினைகளை மிகவும் நன்றாக அறிந்து வைத்திருப்பதால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதோடு, அவரது தலைமையில் அதற்காக விஷேட செயலணியொன்றையும் நிறுவியுள்ளார். பல அமைச்சுகளை உள்ளடக்கியதாக இந்தப்பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடிய நல்ல வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தந்துள்ளார். அவரது வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அவர் கடமைப்பட்டிருக்கிறார்.
இலங்கையில் பொதுவாக மொனராகலை, பதுளை, குருநாகல், புத்தளம் போன்ற சில மாவட்டங்களிலும் குறிப்பாக அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமத்திய மாகாணத்திலும் சிறுநீரக நோயினால் அநேகர் பாதிக்கப்பட்டும் பலர் மரணித்தும் வருகின்றனர். தனிப்பட்ட விதத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றார்.
நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும், அவற்றிற்கான நீர் தாங்கிகளை பொருத்துவதற்கு இந்நாட்டின் முன்னணி நிறுவனமொன்று முன்வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுத்திகரிப்பு இயந்திரங்களை இயக்குவதற்வதற்கான மின்சார வசதிகளை செய்து கொடுப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உதவும்.
பரசன்கஸ்வௌ, ஹபரணை பிரதேசத்தில் பலுகஸ்வேவ ஆகிய இடங்களில் தண்ணீரின் அடர்த்தியைக் குறைத்தும், உலோகங்களின் செறிவை நீக்கியும் சுத்தப்படுத்தும் ஒவ்வொன்றும் 25 இலட்சத்திற்கு மேற்பட்ட ரிவோர்ஸ் ஸ்மோசிஸ் எனப்படும் ஆர்ஓ இயந்திரங்களையும் அதற்கான தொகுதிகளையும் அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்ததோடு, திரிப்பனையில் 175 மில்லியன் ரூபா செலவில் 260 குடும்பங்களுக்கு அதிகமாக பயனடையக்கூடியவாறு குடிநீர் திட்டமொன்றையும் மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைத்தார்.
தமது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அமைச்சர் ஹக்கீம் பரசன்கஸ்வௌ கிராமத்தில் சிறுநீரக நோயினால் இறந்த ஒருவரின் மரண வீட்டிற்கும் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்ட இந் நிகழ்வுகளில் வடமத்திய மாகாண ஆளுநர் டீ.பீ.திசாநாயக்க, நீர்ப்பாசன அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மகளிர் விவகார அமைச்சர் சந்திரா பண்டார, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.முயீனுதீன், உதவிப்பணிப்பாளர் பிரியந்தி டீ சில்வா, அநுராதபுர மாவட்ட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், பிரதான பொறியியலாளர் உட்பட உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் ஆகியோரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


