அரசியலமைப்புச் சபைக்கு சிவில் உறுப்பினர்களை நியமிப்பதற்காக நாடாளுமன்றம் அவசரமாக கூடிய போதிலும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு சபை முதல்வரான அமைசசர் லக்ஷ்மன் கிரியெல்ல யோசனை முன்வைத்தார். இதனையடுத்து சபாநாயகர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.
அரசியலமைப்புச் சபைக்கு சிவில் உறுப்பினர்களை நியமிப்பதற்காக இன்று நாடாளுமன்றம் கூடிய போது சபையில் பெரும் அமளி ஏற்பட்டதுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு யோசனை முன்வைத்தனர்.
சபையில் எழுந்து நின்ற 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கூறினர். இதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை விரும்புவதாக சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து யோசனைக்கு ஆதரவு வழங்கினர்.
எவ்வாறாயினும் வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ஸ ஆகியோர் ஆசனத்தில் இருந்து எழுந்திருப்பதை தவிர்த்து கொண்டனர்.
இந்த யோசனைக்கு தானும் இணங்குவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
