உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முன்னாள் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். இவர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு பாடசாலையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திலிப் வெங்சர்க்காருடன் அக்ரம் கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களை நீக்குவது மற்றும் மாற்றுவது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
மேலும் வாசிக் அக்ரம் கூறியதாவது;
சிறப்பாக விளையாடும் வீரர்களை நீக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டதில்லை. உமர் அக்மல் மற்றும் அகமது ஷேசாத்தை நாம் எப்படி நீக்கலாம்? அவர்கள் இளைஞர்கள். அவர்களுக்காக கடந்த 10 வருடமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்துள்ளது.
பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் அவர்கள் ஏன் இடம்பெறவில்லை? ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அணியில் இருந்து நீக்கியுள்ளனர். நான் ஒரு பயிற்சியாளராக இருந்தால் அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்திருப்பேன். அவர்களை நீக்கியிருக்கமாட்டேன். இந்த கொள்கையினால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
பயிற்சியாளர் பதவி மிகவும் கடுமையானது. கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ளது மகிழ்ச்சி. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை அணுகினால் நான் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவேன். இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் குறித்து என்னை அணுகியது கிடையாது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் இருப்பதால், அவர்கள் வருமானத்தை இழக்கவில்லை. கிரிக்கெட் திறனை மேம்படுத்தும் வாய்ப்பை இழக்கிறார்கள்.
துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் முன்னிலையில் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் காரணமாக அதிக அளவு அனுபவம் பெறுகிறார்கள்.
அதிக அளவு கூட்டத்திற்கு மத்தியில் விளையாடுவதால் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். இது உங்களுக்கு கட்டாயம் தேவை. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து உறுதியாக வருங்காலத்தில் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் என்று நம்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.(ந)
