ஹாசிப் யாஸீன்-
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதார வாழ்வு மையம் திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் சிறுபிள்ளை விடுதி கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், தொற்றா நோய் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ், தர முகாமைத்துவ வைத்தியர் எம்.சீ.மாஹிர், கண் வைத்திய நிபுணர் எம்.ஏ.ஏ.றிசாட் உள்ளிட்ட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்மையத்திற்கு தேவையான ஒரு தொகுதி உபகரணங்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கி வைத்தார்.
இச்சுகாதார வாழ்வு மையத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குருதி அமுக்கம், நீரிழிவு, கொளஸ்றோல் மற்றும் தொற்றா நோய் போன்ற நோய்களுக்கான பரிசோதனை இடம்பெறுவதுடன் மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சையும் வழங்கப்படும் என வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் இதன்போது தெரிவித்தார்.
இச்சுகாதார வாழ்வு மையத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தினால் இதன்மூலம் கூடுதலான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


