ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
19ம் சீர் திருத்தத்திற்கு தற்போதைய ஐ.தே.க அரசு காட்டியளவு அக்கரையினை 20ம் சீர் திருத்ததத்தினைக் கொண்டு வருவதில் காண முடியவில்லை. 19ம் சீர் திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றம், பிரதமர் ஆகியோரிற்கு அதிகாரங்கள் பகிர்தளிப்பானது ஐ.தே.க அரசிற்கு அதிக சாதகமானது. சோழியன் குடும்பி சும்மா ஆடுமா என..??
இவர்கள் ஒன்றும் இது குறித்து மௌனித்து இருந்தவர்கள் அல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் நடை பெற்ற காலப்பகுதியில் ஐ.தே.க இன் பிரதித் தலைவரும் அமைச்சருமான கரு ஜெயசூரிய மனப் பாடம் இட்டாப் போல் தொகுதி வாரித் தேர்தல் முறைமையினை எங்கள் ஆட்சியில் கொண்டு வருவோம் எனக் கூறி வந்தார். இப்போது ஏன் சிறிதும் இது அலட்டிக் கொள்ளவில்லை? இதன் பிற்பாடு இது போல் பெரும் பான்மையினை பெறுவார்களா..?
தொகுதி வாரித் தேர்தல் முறைமையில் உள்ள மிகப் பெரிய குறைபாடு எதிர் கட்சி வலுமிக்கதாக அமைவதில்லை. மிகச் சிறிதளவான வாக்குகள் தேர்வாகும் உறுப்பினர் எண்ணிக்கையில் மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். தொகுதி வாரித் தேர்தல் முறைமை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ காலத்தில் இருந்திருந்தால் ஐ.தே.க மிகக் குறைவான உருப்பினர்களிற்குள் முடக்கப்பட்டிருக்கும். தொகுதி வாரித் தேர்தல் முறையில் குறித்த தொகுதியில் யார் பிரபலமோ அவரே தெரிவாகுவர்.
எதிர் வரும் தேர்தலில் மைத்திரி தலைமையிலான சு.க, மகிந்த ஆதரவு அணி, ஐ.தே.க என மூன்று அணிகள் செல்வாக்குச் செலுத்தும்.
நேற்றைய தினம் புதன் கிழமை ௦6-௦5-2௦15 மைத்திரிக்கும் மகிந்தவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பினைப் பார்க்கும் போது அவர்கள் ஒன்றிணையும் சாத்தியமும் உள்ளது. தொகுதி வாரித் தேர்தல் முறைமையில் தேர்தல் நடைபெற்று இவர்கள் ஒன்றிணைந்து தேர்தல் கேட்கும் போது அது ஐ.தே.க இன் உறுப்பினர் எண்ணிக்கைக்கு பாரிய சவாலாக அமையும். ஏனெனில், 18 வருட காலங்களிற்கு மேலாக இலங்கைத் திரு நாட்டினை சு.க தனது ஆளுகையின் கீழ் வைத்திருப்பதால் அதில் உள்ளவர்கள் பதவிகள், பட்டங்கள், சேவைகள் என மக்கள் மத்தியில் அதீத பிரபலத்துடன் உள்ளனர்.
இதன் காரணமாக சு.க உறுபினர்களுடன் ஐ.தே.க உறுப்பினர்கள் போட்டி போடுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ காலத்தில் அதிக இன்றைய ஐ.தே.க இன் மிகப் பெரிய தலையாக திகழும் தற்போதைய அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் கூட அவரினது திஸ்ஸ மகாராம தொகுதியினை வெற்றி பெற முடியவில்லை. அந் நேரத்தில் தொகுதி வாரித் தேர்தல் முறைமை இருந்திருந்தால் அமைச்சர் சஜித் பிரேமதாசா கூட தேர்வாகி இருக்க மாட்டார். இந்நிலைமை மீண்டும் ஐ.தே.க இற்கு வராது என்று இல்லையே..??
மேலும், தற்போதைய நிலமைகளினை வைத்துப் பார்க்கும் போது மைத்திரி தலைமையிலான சு.க,மகிந்த ஆதரவு அணி,ஐ.தே.க என மூன்று அணிகள் செல்வாக்குச் செலுத்தவும் வாய்ப்பு உள்ளது. இரு வெவ்வேறு அணிகளாக சு.க பிரியுமா? இல்லையா? என்பது தேர்தல் நடக்கும் காலப்பகுதியில் தான் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஒரு தொகுதியில் ஒரு கட்சி ஒரு நபரையே போசித்து வைத்திருப்பதால் இரு அணிகளாக சு.க பிரிந்து தேர்தல் தொகுதி வாரியிலும் நடைபெறுமாகவும் இருந்தால் அதிக பிரபலங்களினைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்று மைத்திரி அணி வெற்றி வாகை சூடும் அல்லது மகிந்த அணி வெற்றி வாகை சூடும். யானைச் சண்டையில் அகப்பட்ட தகரப் பத்தை போல் ஐ.தே.க சிதைக்கப்பட்டு விடும். ஆனால், ஒரு மாவட்டத்தில் பல தொகுதிகள் காணப்படுவதன் காரணமாக இச் சந்தர்ப்பத்தில் தற்போது நிலவுகின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமை நிலவுமாக இருந்தால் ஒரு மாவட்டத்தில் சு.க இரு பிரபலங்கள் மோத வழியேற்படும்.
இதன் காரணமாக மாவட்டத்தினை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்தினை ஐ.தே.க பெறுவதன் காரணாமாக போனஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக பல ஆசனங்களினை பெறுவதற்கான சாத்தியம் அதிகம்.
சுருங்கச் கூறின் தற்போது நிலவுகின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமையானது தொகுதி வாரித் தேர்தல் முறைமையினை விட எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க வெற்றி வாகை சூடுவதற்கான சாதகத் தன்மையினை அதிகமாகும். சோழியன் குடும்பி சும்மா ஆடுமா என..?? உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா..?றி
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
