'நூதனசாலையில் சிலைகளை அமைக்கும் விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டுதல்களை நிராகரித்து மார்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இஸ்லாத்திற்கு முரண்படாத வகையில் சமூக நோக்கத்தை நிறைவு செய்யத்தக்க ஒன்றாக காத்தான்குடி நூதனசாலையை அமைப்பதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) காத்தான்குடி செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் கலாசார வரலாற்றுத் தடயங்களை பாதுகாத்துக் காட்சிப்படுத்துவதற்கென காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் நூதனசாலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
'பல நூறு வருடங்களாக இலங்கையில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் கலாசார பாரம்பரியங்களையும், வரலாற்றுத் தடயங்களையும் ஆவணப்படுத்துவதும் பாதுகாப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறான நோக்கத்திற்காக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் நூதனசாலை வரவேற்கப்பட வேண்டிய ஒரு வேலைத்திட்டமாகும். எனினும் முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும் இந்த நூதனசாலையில் முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரப் பாரம்பரியங்களும் காட்சிப்படுத்தப்படும் விதம் இஸ்லாமிய வரையறைகளுக்கு முரண்படாத வகையில் இருத்தல் வேண்டும்.
அந்தவகையில் அமைக்கப்பட்டுவரும் இந்த நூதனசாலையில் முஸ்லிம்களின் வரலாற்றைக் காட்சிப்படுத்தும் பொருட்டு பல உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுவருவதாக நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி ஆராய்ந்துள்ள காத்தான்குடி உலமாக்களும் தஃவா அமைப்புக்களும், இவ்வாறு உருவச்சிகலைகள் அமைத்தல் என்பது இஸ்லாத்திற்கு விரோதமான ஹறாமான செயற்பாடு என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள். குறித்த நூதனசாலையிலிருந்து இந்த சிலைகள் அகற்றப்படவேண்டும் எனவும் மிகத்தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்கள்.
இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் உருவச்சிலைகளை அமைக்கின்ற விடயத்தினை முன்னெடுத்து வருவதாகவும் தெரிகின்றது. மாத்திரமன்றி இது தொடர்பில் தெளிவான மார்க்கக் கருத்துக்களைச் சொல்லும் உலமாக்களுக்கும் தஃவா அமைப்புக்களுக்கும் அழுத்தம் கொடுத்து அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளையும் அவர் மறைமுகமாக மேற்கொண்டு வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.
சமூக அரசியல் விவகாரங்களில் இஸ்லாமிய ரீதியான வழிகாட்டுதல்களையும் தீர்ப்புக்களையும் சொல்லுகின்ற உரிமை உலமாக்களுக்கு மாத்திரமே உரியது. உலமாக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கின்ற நிலைமையினை உறுதி செய்யப்படவேண்டியது எல்லோருடைய கடமையுமாகும். இதுபோன்ற விடயங்களில் உலமாக்களின் கருத்துக்களை மாற்றியமைப்பதற்கோ அல்லது மலினப்படுத்துவதற்கோ எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிக்கப்படலாகாது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால்,அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப சமூக அரசியல் விடயங்களில், இஸ்லாமிய மார்க்க வரையறைகள் திரிபுபடுத்தப்படுகின்ற, மீறப்படுகின்றன அபாய நிலை தோன்றும்.
அந்தவகையில், குறித்த நூதனசாலையில் சிலைகளை அமைக்கும் விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டுதல்களை நிராகரித்து மார்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை மார்க்கத்தைத் தெளிவாகச் சொல்லுவதற்குரிய உலமாக்களின் சுதந்திரத்தை நசுக்க முயலும் அவரது நடவடிக்கைளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எனவே, குறித்த நூதனசாலை அமைப்பு விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டல்களை மதித்து மார்க்கத்திற்கு விரோதமான அம்சங்களை அகற்றி இஸ்லாத்திற்கு முரண்படாத வகையில் சமுக நோக்கத்தை நிறைவு செய்யத்தக்க ஒரு நூதனசாலையாக அதனை அமைப்பதற்கு பா.உ. ஹிஸ்புல்லாஹ் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.'
