த.நவோஜ்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என சூழ்ச்சி செய்தவர்கள் எம்மை ஆட்சியில் இருந்து துரத்த எத்தணித்துவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது நிலையானதாக இருக்காது என்ற காரணத்தினாலேயே நாம் உடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்திற்கு பொருட்கள் வியாழக்கிழமை வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணத்தில் இந்த மூன்று மாதத்திற்குள் பலர் கபடத்தனமாக ஆட்சி அதிகாரத்தினைப் பெற முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் எமது நடவடிக்கை புதிய பரினாமம் பெற்றுள்ளது. இதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் மறுபடியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் மண்டியிட்டார்கள். தாம் எங்களுடன் வந்து இணைவதாகவும் எமக்கு முதலமைச்சுப் பதவியைத் தருவதாகவும் தெரிவித்து கபட நாடகத்தினை நிகழ்த்தினார்கள்.
இதன் போது எமது தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் தான் இது தொடர்பில் முடிவினை மேற்கொள்ள முடியாது. எமது மாகாண சபை உறுப்பினர்கள் பதினொரு பேரும் தான் இதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்து விட்டார். இதுதான் எமது தலைமையின் பண்பு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மாகாண சபை ஆட்சியில் இருந்து துரத்த எத்தணித்தவர்களுடன் நாம் கூட்டுச் சேரும் போது அது எமக்கு நிலையானதாக இருக்காது என்பதால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
நாங்கள் அதிகாரப் பரவலாக்கத்தினைக் கேட்பவர்கள். அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் நாங்கள் இன்று ஒரு தமிழ் பேசும் சமுகத்துடன் தான் இணைந்துள்ளோம். அவர்கள் எமக்கு பல தடவைகள் hதுரேகங்களைச் செய்திருந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் இருப்பதால் நாம் அவர்களுடன் சேர்ந்திருக்கின்றோம். ஆனால் அவர்களிடம் மண்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை.
இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் ஏதோவொரு வகையில் இன்று எமக்கு இந்த மாகாண சபை முறைமை கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இந்த முறையில் வடக்கு கிழக்கை பிரித்ததன் பின்னர் ஆட்சியமைப்பது தொடர்பில் நாம் கூட்டிணைய வேண்டி இருக்கின்றது. இதனால் தான் நாம் பலரினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது வடக்கு கிழக்கு இணைந்திருந்தால் எமது ஆட்சி எப்போதோ நிலையான ஆட்சியாக பரினமித்திருக்கும்.
எனவே எமது தாயகம் வடகிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பிரிவினை இல்லாமல் உள்ளக சுயாட்சி முறைமையினை ஏற்று இதற்கு எமது மக்கள் தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என்ற பல எண்ணப்பாடுகளுடனேயே நாம் தற்போது அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றோம்.
இந்த நாட்டினைப் பிரிக்க கூடாது என்ற நோக்கமே எம்மிடமும் இருக்கின்றது. நாம் ஒற்றுமையாக இருந்து எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்க வேண்டும். இந்த கிழக்கு மாகாணத்தில் 40 வீதமாக இருக்கின்றோம். ஆனால் இந்த மாகாணத்தில் 36 வீதமாக இருக்கின்ற சகோதர முஸ்லீம் இனத்தவர்கள் எம்மை விட அதிகமான உறுப்பினர்களை பெறுகின்றார்கள். இது எவ்வாறு நிகழ்கின்றது என்று எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.
எனவே எமது ஒற்றுமையும் எமது பலமும் சேரும் பட்சத்திலே தான் நாம் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
