இக்பால் அலி-
கடந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவினர் கவனத்தில் கொள்ளப்பட வில்லை எனவும் இக்கட்சியின் மக்கள் பிரதிநிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபா மட்டுமே உள்ளார் எனவும் இவருக்கு தகுதிவாய்ந்த அமைச்சுப் பதவி வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் குருநகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அந்த கடிதத்தில் மேலும் சுட்டிக் காட்டுகையில் ஜனாதிபதியான மைத்திபால சிறிசேன மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இந்நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் நூற்றுக்கு 90 விகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்தினால் வழஙக்கப்படும் சலுகை வரப்பிரசாதங்கள் பெரியதாக எதுவுமே வழங்கப்பட வில்லை.
இதேவேளை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் தங்களுடைய வெற்றிக்காக கட்சியை விட்டுத் தாவி கடுமையாக உழைத்தவர். உங்களுடைய ஆட்சியில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு முஸ்லிம்களை கௌரவப்படுத்தும் வகையில் தகுதிவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் முக்கிய பிரதிநிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபா மட்டும் அங்கம் வகிக்கின்றார்.
அவருக்கு தகுதி வாய்ந்த அமைச்சுப் பொறுப்பை வழங்குமாறு அந்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.
