அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு வளங்களின் பாய்ச்சலை நிச்சயப்படுத்துகின்ற பொறி முறையொன்றை நிறுவுவதற்கும் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உறவு வலுப்பெறவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றது.
இவ் அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முதற்தடவையாக பொதுநிருவாகஇ புத்த சாசன, நல்லாட்சி மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய வருகை தந்திருந்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்
அதிகாரப் பகிர்வு, அதிகாரத்தைப் பங்கிடுவதற்கான மிக முக்கியமான ஆட்சிப் பொறிமுறையாக ஆளுகைப் பொறிமுறையாக 13 ஆவது அரசியல் திருத்தம் மிகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தத்தினைத் தழுவி தனது பங்கினை ஆற்றுகையில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அனைத்து வளங்களையும் தற்போது கிழக்கு மாகாணம் தன்னகத்தே கொண்டுள்ளது.
கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு மாகாணத்திற்கான மாகாண சபை தாபிக்கப்பட்டதன் பின்னர் பல உட்கட்டுமான செயற்திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் சிறந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல் மற்றும் இவைகளுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கில் முற்படுத்தப்பட்ட கிழக்கின் எழுச்சி மற்றும் ஏனைய அபிவிருத்தி முன்னெடுப்புகள் நியாயமான வகையில் வெற்றி கண்டுள்ளது. இவை அனைத்தும் பாராட்டத்தக்க அபிவிருத்திகளாகும்.
அபிவிருத்தியின் அத்தியாவசியத் தன்மையை கருத்தில் கொண்டு நான் அமைச்சரிடம் கேட்டுக் கொள்வது யாதெனில், மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே எவ்வாறு மென்மேலும் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை மீண்டும் ஒரு தடவை நன்கு ஆராய வேண்டுவமென்பதாகும்.
அபிவிருத்தி சவால்களையும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகளையும் பரந்த நோக்கில் ஆராய்வதற்கான காலம் தற்போது மலர்ந்துள்ளது.
நாம் ஒவ்வொருவரும் குறுகிய அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவினைகளில் இருந்து விடுபட்டு தேசிய நலனுக்காக செயலாற்றி இப்பிரச்சினைகளுக்கான அனுகுமுறையில் முற்றுமுழுதாக இலக்கு நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.
இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான வினைத்திறன்மிக்க வழிகளையும் உபாயங்களையும் கண்டுபிடிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகப் பிரிவுகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.
மத்திய அரசாங்கத்தையும் மாகாண சபையினையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மாவட்ட செயலாளர்களும் பிரதேச செயலாளர்களும் இரட்டை வகிபங்கினை ஆற்றுகின்றனர். எனவே மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையே அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் அவர்களின் ஒத்துழைப்பு மிக இன்றியமையாததாகும்.
ஜனாதிபதி அவர்களின் நல்லாட்சியை அடித்தளமாகக் கொண்ட ஜனநாயக கட்டமைப்பு என்ற தூர நோக்கிற்கு நாம் முழுமையான ஆதரவினை தெரிவிக்கின்றோம்.
இதன் மூலம் மாகாணங்கள் புதிய உத்வேகத்துடன் அபிவிருத்தி அபிலாசைகளை அடையும் வகையில் சக்திப்படுத்தப்படும் என்பது எமது நம்பிக்கையாகும்.
இது அனைத்து மாகாணங்களையும் தத்தமது வளங்களை பயனுறுதி வாய்ந்தவகையில் பிரயோகித்து இலங்கையை உலக அரங்கில் தனக்கே உரித்தான இடத்தினை நோக்கி நகர்த்தக்கூடிய வகையில் இயலுமையுள்ளதாகவும் மாற்றக்கூடியது என்றார்.
நிகழ்வின்போது கல்வி, விவசாயம், முதலீட்டு ஊக்குவிகப்பு,சுற்றுலாத்துறை, சுகாதாரம், உள்ளுராட்சி நிருவாகம் பற்றிய விடயங்களையும் முதலமைச்சர் சிலாகித்து விரிவாகப் பேசினார்.
இவ் மாகாண அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர், தவிசாளர், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
