அபூ மனீஹா-
அம்பாறை அக்கரைப்பற்று நுரைச்சோலை விவசாயக் கண்டத்தில் 1250 ஏக்கர் காணியில் பல வருடங்களாக மேற்கொண்டுவரும் நெற்செய்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் அக்கரைப்பற்று கிளையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு .இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் அக்கரைப்பற்று கிளையின் தலைவரும் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளருமான எம்.ஐ. உதுமாலெவ்வையினால் ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
சுமார் 500 விவசாயக் குடும்பங்கள் 1250 ஏக்கர் காணியில் இந் நொரைச்சோலை பிரதேசத்தில் பல வருடங்களாக நெற் செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனிக்கூட்டுத் தாபனத்தினால் கரும்புச்செய்கை பன்னுமாறு பலவந்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவசாயிகள் அனைவரும் தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயம் (நெற்செய்கை) மேற்கொள்ளவே விரும்புகின்றனர்.
எனவே அதிமேதகு ஜனாதிபதியான நீங்கள் இது விடயமாக நடவடிக்கை எடுத்து இவ் ஏழை விவசாயக் குடும்பங்களினது நன்மை கருதி இக்காணியில் நெற்செய்கை மேற்கொள்ள உதவுமாறு அம்மகஜரில் கேட்கப்பட்டுள்ளது.
இது விடயமாக அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் உயர்கல்வி அமைச்சருமான கபீர் ஹாஸிமுக்கு இம்மகஜரின் பிரதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதேச முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பிலான மகஜர் அனுப்பிவைக்கப்பட்டும் இது காலவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)