கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் 7 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து இரகசிய பொலிஸாரினால் திஸ்ஸ அத்தநாயக்க, கைது செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் திஸ்ஸவினால் காண்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு நிலையில், இந்த சந்தேகநபருக்கு பிணை வழங்கினால், சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்றும் இந்த விடயத்தை மக்கள் தீவிரமாக அவதானித்து வரும் நிலையில், அவருக்கு பிணை வழங்கினால் மக்கள் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இந்த விடயங்களை அவதானித்த கோட்டை மேலதிக நீதவான் ஜயந்த டயஸ் நாணயக்கார, சந்தேகநபரான அத்தநாயக்கவை எதிர்வரும் 11அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று அவ்விருவரின் போலிக் கையெழுத்துக்களுடனான ஆவணமொன்றை அவர் வெளியிட்டார்.
அதுமட்டுமன்றி மைத்திரிபாலவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டே கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்து நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்விரு ஆவணங்கள் தொடர்பிலும் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தியதில், அவ்வாறான ஒப்பந்தங்கள் உண்மையில் கைச்சாத்திடப்படவில்லை என்றும் திஸ்ஸ அத்தநாயக்கவினால் காண்பிக்கப்பட்டவை போலியானவை என்றும் தெரியவந்துள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 வருடகால சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
