அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்கத்திற்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள வாழ்வாதார உதவிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அச்சங்க பிரதிநிதிகள் கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களை நேரடியாக சந்தித்து முறையிட்டுள்ளனர்.
இச்சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் அமைந்துள்ள முதல்வரின் பிரத்தியேக அலுவலகத்தில் இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.மீரா முஹைதீன், பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.அஷ்ரப், செயலாளர் ஏ.எம்.அமீர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இவர்கள் இவ்விவகாரம் தொடர்பில் முதல்வரிடம் முறையிடுகையில்;
"கல்முனை வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்கத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஏழு லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்நிதியின் மூலம் 32 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் தற்போது குறித்த விடயம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலாளர் எம்மிடம் தெரிவிக்கின்றார். இதனால் பாதிக்கப்பட்டுள்ள எமது சங்க உறுப்பினர்கள் கவலையுடன் அங்கலாய்க்கின்றனர்.
ஆகையினால் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்" என வேண்டுகோள் விடுத்தனர்..
இதனை செவிமடுத்த முதல்வர் நிஸாம் காரியப்பர்; குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் போன்றோருடன் உரையாடி உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
.jpg)