இன்று ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, சிரேஷ்ட உயர்நீதிமன்ற நீதியரசர் என்ற ரீதியில் கே.ஶ்ரீபவனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு பிரதம நீதயரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றப் பிரேரணை தாக்கல் செய்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கம், தெரிவிக்குழு விசாரணையை அடுத்து அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.
இதனையடுத்து பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் பொறுப்பேற்றார். பின்னர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மீளவும் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தது.
மேலும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்தமை மற்றும் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்தமை போன்ற இரண்டு நடவடிக்கைகளும் கடந்த அரசாங்கத்தால் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு செய்யப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நேற்றையதினம் ஷிரானி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக கடமைகளைப் பொறுப்பேற்றதோடு, இன்று அப்பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இந்தநிலையில் அந்தப் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
இதேவேளை மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாக ஶ்ரீபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
