ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை நகரிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள பதாதைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கடந்த 3 தினங்களாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள அம்பாறை நகர சபை பிரதேசங்கள் அண்மைக்காலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளாலும் நீல நிற கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எனினும் அம்பாறை பொலிஸார் அம்பாறை நகர சபைத்தலைவர் இந்திக நளினுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையையடுத்து அம்பாறை நகர சபையால் போடப்பட்டிருந்த பதாதைகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.
தேர்தல்கள் ஆணையாளர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளின் பேரிலேயே இவை அகற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பாறை நகர சபையின் தலைவர் இந்திக நளின் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து செயற்படும் நோக்குடனேயே எமது நகர சபை ஊழியர்களைக் கொண்டே நாம் எமது ஜனாதிபதியின் பதாதைகளையும் சுவரொட்டிகளையும் முதலில் அகற்றியுள்ளோம். தொடர்ந்து ஏனைய பதாதைகளும் அகற்றப்படும். எமது செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு ஏனைய நகர மற்றும் பிரதேச சபையினரும் நாட்டின் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.