நாட்டில் பயங்கரவாதத்தினை வளர்க்கவோ, இனவாதத்தினை தூண்டவோ சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது எதிரணியினை உருவாக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தினை மாற்றியமைக்கவே நாம் கைகோர்த்துள்ளோம் என தெரிவித்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும் கோட்டே நாக விகாரையின்
விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ முஸ்லிம் காங்கிரஸிற்கோ தனிக்கொள்கைப் பத்திரமோ அல்லது நிபந்தனைகளோ இல்லை. புரிந்துணர்வுடனே அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பொது எதிரணி தனி நிபந்தனைகளுடன் உடன்படிக்கை செய்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அரசாங்கத்தின் மீதுள்ள அதிர்ப்தியும் அரசாங்கத்தின் பாதையினை மாற்றி அமைக்கவுமே நாம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டு வந்தோம். இப்போதும் நாங்கள் சகல எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்திருப்பதும் நாட்டையும் மக்களையும் காப்பாற்றவே, தவிர நாட்டிற்கு எதிராண தீவிரவாதத்தினை ஏற்படுத்தவோ அல்லது இந்த நாட்டினை அழிவுப் பாதையில் கொண்டு செல்லவோ அல்ல. பொது எதிரணியில் சகல கட்சிகளும் சகல இன மக்களை பிரதிபளிக்கும் தலைவர்களும் உள்ளனர். பௌத்த மதத்தலைவர்கள் சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என பலரும் உள்ளனர். எனவே, இவ்எதிரணி இனவாதத்தினையோ, பிரிவினை வாதத்தினையோ தூண்டப் போவதில்லை.
அதேபோல் தான் சகல கட்சிகளையும் ஒரு அணியில் ஒன்றினைத்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காகவே தவிர சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்காக அல்ல. எனவே, புரிந்துணர்வுடனும் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள பொது நிகழ்ச்சி நிரழுக்கு அமையவே எமது சகல நடவடிக்கைகளும் அமையப் பெற்றுள்ளது.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் நாங்கள் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் இதுவரையில் பொது எதிரணியுடன் கைகோர்ப்பதாக தெரிவிக்கவும் இல்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடனான சந்திப்பினை கூட்டமைப்பு மேற்கொண்ட போது தனி நிபந்தனைகளையோ, கொள்கைகளையோ முன்வைக்கவில்லை. அவர்கள் அனைவரும் பொது கொள்கையொன்றில் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியினையே மேற்கொள்கின்றனர். எனவே இதில் எவரினதும் தனி நிபந்தனைகளுக்கு இடமில்லை என்பதை சகல கட்சிகளும் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment