ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறப்போகின்றது என்ற பயம் அரசாங்கத்தினை ஆட்டத் தொடங்கியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இப்போதே பணத்தினைக் கொடுத்து பல சுப்பஸ்டார்களை இறக்கியிருக்கின்றது அரசாங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சனசமூக நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்களும் ஒரு தேசிய இனமாக வாழவேண்டுமாக இருந்தால் எமது நிலத்தினை நாம் முதலில் பாதுகாக்கவேண்டும்.
அதனை பாதுகாத்தால்தான் சர்வதேசத்திடம் சென்று நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் எங்களுக்கான தீர்வினைத் தாருங்கள் என்று கேட்கமுடியும்.
எமது மண்ணை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாப்பது கட்டாயமான கடமையாகும். இன்று அபிவிருத்தியினைப் பற்றி பேசுகின்றவர்கள் மண்ணைப் பற்றி சிந்திப்பதில்லை.
மட்டக்களப்பில் உள்ள எல்லைக் கிராமங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் பலவந்தமாக பறிக்கப்பட்டு தன்னகப்படுத்துவற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.
நாங்கள் இதனை சும்மா பார்த்துக்கொண்டு இருப்போமானால் எமது கைகளில் இருந்து நிலம் பறிபோய்விடும் நிலம் பறிபோய்விடுமாக இருந்தால் எமது இனத்தினை பாதுகாக்கமுடியாது.
நாங்கள் தேர்தலுக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல மாறாக எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக அரசியல் செய்கின்றோம். அதன் காரணமாகத்தான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது த.தே.கூட்டமைப்பிற்கு பின்னால் நில்லுங்கள் என்று அதனை விடுத்து வேறு எந்த தேவையும் எமக்கில்லை.
எதிர்காலத்தில் இந்த நாட்டிலே ஜனாதிபதி தேர்தல் வரப் போகின்றது என்று கூறுகின்றார்கள் அது எப்பவந்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எந்தத் தேர்தல் எப்ப வந்தாலும் அதனை எமது கட்சி சந்திப்பதற்கு தயாராகவே இருக்கின்றது.
2009 மே மாதத்துடன் த.தே.கூட்டமைப்பு இல்லாமல் போயிருந்தால் இந்த நாட்டிலே என்ன நடந்திருக்கும் என்பதனை இன்றைய சூழலை கருத்தில் கொண்டு அனைவரும் புரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
காரணம் எமது மக்களுக்கான உரிமை கிடைக்க அன்று போராடுகின்றோம் என்று கூறியவர்கள், இன்று உரிமை தேவையில்லை அபிவிருத்தி மாத்திரம் இருந்தால் போதும் என்று கூறுகின்றார்கள்.
அவர்கள் போகும் வழிகளிலெல்லாம் நாங்களும் போனால் சரி என்றுதான் நினைக்கின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாரில்லை.
இந்த நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட 500பேருக்கும் மேற்பட்டோர் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை விடுதலை செய்வதற்கு இந்த ஜனாதிபதி உடன்படுவாரா?
போர் முடிந்து எத்தனை வருடங்களாகி விட்டது இன்றும் அவர்கள் சிறைவாசம்தான் அனுபவித்து வருகின்றார்கள்.
போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்கள் தாங்கள் குடும்பங்களுடன் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இங்கு என்ன நடக்கின்றது, யார் நிம்மதியாக இருக்கின்றார்கள்.
நாங்கள் எதற்காகவும் எங்கள் உரிமைகளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்க முடியாது. உரிமை வேறு, அபிவிருத்தி வேறு. மக்களுக்கான அபிவிருத்தியை அரசாங்கம் செய்துதான் ஆகவேண்டும்.
அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி. ஆனால் இங்கு பலர் ஏதோ தாங்கள்தான் அபிவிருத்தியை செய்வதாக கூறுகின்றார்கள் என அவர் பேசினார்.
0 comments :
Post a Comment