வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்ற திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்திய பின்னரே அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவேண்டும். நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.லிங்கநாதன் தெரிவித்தார்.
வடக்கில் இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்புத் தொடர்பாக விசேட அமர்வு வடமாகாண சபையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணி விடயங்கள் தொடர்பில் மாகாண சபை, மத்திய அரசு, மகாவலி சபை போன்றவற்றிற்கு அதிகாரம் இருந்தாலும் மாகாண காணி ஆணையாளருக்கும் குறிப்பிட்ட சட்ட நியதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தென்னமரவாடி காணி தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உங்களுடைய மாகாண சபை சட்டத்தைப் பயன்படுத்தி இதற்குத் தீர்வுகாணுங்கள் என அவர் கிழக்கு மாகாண சபைக்குக் கூறியுள்ளார்.
கிழக்கில் அவ்வாறான நடைமுறை பொருத்தமானதாக இருக்குமாயின் வடக்கு மாகாணத்திற்கும் அது பொருத்தமானதாக அமையும்.
நான் பலமுறை அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி இங்குள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்து வருகின்றேன். இதன் பிரதிகளை மாகாண முதலமைச்சருக்கும் அனுப்பியுள்ளேன்.
ஆனால் எனது கோரிக்கைகளுக்கு என்ன நடக்கின்றது என்பது எனக்குத் தெரியாமலுள்ளது.
சில வேளைகளில் நான் ஆயுதக்கட்சியைச் சேர்ந்தவன், தமழரசுக் கட்சியைச் சேராதவன் என்பதால் எனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையோ எனவும் நான் எண்ணியதுண்டு. ஆனால் நான் வடமாகாண சபைக்கு வந்து கன்னியுரை ஆற்றியதிலிருந்து இன்றுவரை அரசியல் பேசவில்லை. மாகாண சபைக்குட்பட்ட வகையில் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை மட்டுமே கூறிவருகின்றேன்.
அண்மைக்காலமாக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்து இனப்பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரிவருகின்றது. இந்த விடயத்தில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு ஒரு விடயத்தைக் கூறிவைக்க விரும்புகின்றேன். இவ்வாறான பேச்சுக்களுக்கு அழைப்பதாக இருந்தால் அதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்ற நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்தவேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தினால் மட்டுமே அரசாங்கத்துடன் பேசுவோம் எனவும் தெரிவிக்கவேண்டும். அதுவே எமது மக்களு டைய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கான சரியான வழிமுறையாக அமையும் என்றார்.
0 comments :
Post a Comment