அண்மையில் மியான்மாரின் கடும்போக்குவாத 969 அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட, இலங்கையின் கடும்போக்குவாத பௌத்த அமைப்பான பொதுபல சேனாவின் அடுத்த கட்டத் திட்டம் பிசுபிசுத்துப் போயிருக்கிறது.
இந்தியாவின் இந்து தேசியவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கூட்டுச் சேரும் பொதுபல சேனாவின் முயற்சியே தோல்வி கண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள இந்து தேசியவாத அமைப்பான 'ராஷ்ரிய சுவயம்சேவக் சங்' தான் சுருக்கமாக ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவைத் தற்போது ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசாங்கத்தின் ஆணிவேர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பையே குறிப்பிடலாம்.
இது அரசியலில் வெளிப்படையாக ஈடுபடாது, தேர்தல்களில் போட்டியிடாது. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் மூலம், அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமன்றி, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் கூட, ஆரம்பத்தில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களாக இருந்தே தலைவர்களாக உயர்ந்தவர்கள்.
தற்போதைய இந்திய அமைச்சரவையில் இருக்கின்ற பலரும் கூட இதேபோன்று ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் அரசியலுக்கு வந்தவர்கள் தான்.
இந்தியாவை பா.ஜ.க. ஆட்சி செய்தாலும், அதன் கொள்கைகள் திட்டங்களைத் தீர்மானிப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் கணிசமான பங்கு இருக்கிறது.
அந்தளவுக்கு பா.ஜ.க.வில் செல்வாக்குச் செலுத்துகின்ற அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். ஒரு இந்து தேசியவாத அமைப்பாகும். பல்லின, பல மத, பல மொழிகளைக் கொண்ட நாடான இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு, அவ்வப்போது சவால் மிக்கதொரு சக்தியாகவே ஆர்.எஸ்.எஸ். விளங்குகிறது.
அதாவது, இந்து தேசியவாதத்தை நிலைநாட்டுவதற்காக இந்து மதத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு அமைப்பாகவே இது இருக்கிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு காரணம், இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தான்.
ஆர்.எஸ்.எஸ். கரசேவகர்கள், அயோத்தியில் மீண்டும் ராமர் கோவிலைக் கட்டப் போவதாக, பாபர் மசூதியை நோக்கிப் பேரணியாகச் சென்ற போது, அப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் தடுத்து நிறுத்த முனையவில்லை.
ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், கண்மூடி முழிப்பதற்குள், பாபர் மசூதியை இடித்து விட்டு, அங்கு ஒரு இராமர் சிலையை நிறுவி சிறிய கோவில் கட்டுமானத்தையும் மேற்கொண்டனர்.
1993ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
இன்று வரை, பாபர் மசூதியைப் பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, அப்போது கட்டப்பட்ட இராமர் கோவிலை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைவருக்கும் தடை செய்யப்பட்ட பகுதியாகவே அது இருக்கிறது.
பல்வேறுபட்ட நாடுகள், இனங்கள், மதங்களின் படையெடுப்புக்கு உட்பட்ட இந்தியாவில், பல இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் மீது பிற மத வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. அதுபோலத் தான், அயோத்தியிலும் ராமர் கோவில் அழிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டதாக கூறுகிறது வரலாறு.
அந்த மசூதியை இடித்து, விட்டு அதன் மீது ஒரு சில மணிநேரங்களில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து கோவிலைக் கட்டும் அளவுக்கு வலுவான அமைப்பாக விளங்குகிறது ஆர்.எஸ்.எஸ்.
அத்துடன், இஸ்லாமிய மதப் பரவலைத் தடுக்கும் கடும்போக்குவாதம், இதன் அடிப்படைக் கொள்கையாகவே இருக்கிறது. இந்தியாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு பெரும் பலமாகவே இருந்தாலும், அதன் பலவீனமாக இருப்பதும், ஆர்.எஸ்.எஸ். தான்.
பா.ஜ.க. குறித்து சிறுபான்மையினத்தவர்கள் அச்சம் கொள்வதற்கும், அது மத்தியிலும் மாநிலங்களிலும் பலமுறை ஆட்சியை இழப்பதற்கு அல்லது ஆட்சியில் ஏறுவதற்கான வாய்ப்பை இழப்பதற்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கடும் போக்குவாதமும் ஒரு காரணம்.
இந்தியாவிலுள்ள மத சிறுபான்மையினருக்கு ஆர்.எஸ்.எஸ். அச்சுறுத்தலுக்குரிய ஒரு அமைப்பாகவே தெரிகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதிலும் குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையில், ஒரு பனிப்போர் எப்போதுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கைகோர்க்க முயற்சித்தது பொதுபல சேனா. மியான்மாரின் 969 அமைப்புடன் பொதுபல சேனா செய்து கொண்ட உடன்பாட்டுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு, பொதுபல சேனா மேற்கொண்ட முயற்சிக்கும் இடையில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன.
தெற்காசியப் பிராந்தியத்தில், அமைதியை ஏற்படுத்துவதற்காகவும், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்காகவும், தான் மியான்மாரின் 969 அமைப்பின் தலைவராக இருக்கும், அசின் விராது தேரருடன் உடன்பாடு செய்து கொண்டதாக பொதுபல சேனா கூறியிருந்தது.
விராது தேரரின் 969 அமைப்பு, மியான்மாரில், சிறுபான்மை முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும், அவர்களின் வீடுகளை எரித்து, இன அழிப்பில் ஈடுபடுகின்ற ஒரு தீவிரவாத அமைப்பாகும்.
அந்த அமைப்பின் செயற்பாடுகளையும் பொதுபல சேனா முன்னுதாரணமாக் கொண்டு செயற்படுகிறது. இலங்கையில் அண்மைக்காலத்தில் நிகழ்ந்து வந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அத்தகையவையே.
ஆனால், மியான்மாரின் 969 அமைப்பு போன்று தொடர்ச்சியான வன்முறைகைளைக் கையில் எடுக்கும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். விளங்கவில்லை. இந்தியா போன்றதொரு நாட்டில், அத்தகைய போக்குடன் செயற்பட முடியாது.
ஆர்.எஸ்.எஸ். கடுமையான இந்து தேசியவாதப் போக்கை கடைப்பிடித்தாலும், மிகவும் தந்திரமான முறையில் தமது கொள்கையை அரசியல் மயப்படுத்தியுள்ளது. அதே உத்தியையே இப்போது பொதுபல சேனாவும் கையாள முனைகிறது.
அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பதே பொதுபல சேனாவின் இப்போதைய இலக்கு. அண்மையில் 5000 பிக்குகளைக் கூட்டி நடத்திய மாநாடு அதற்கான அடித்தளம் தான்.
இந்த 5000 பிக்குகளும் ஒவ்வொரு கிராமத்திலும், 100 பேரை தம் கைக்குள் போட்டுக் கொண்டு, 50 இலட்சம் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற நினைக்கிறது பொதுபல சேனா.
அது பொதுபல சேனா மாநாட்டில் பகிரங்கமாகவே கூறப்பட்ட திட்டம். இந்த ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டைச் சிங்கள பௌத்த மயப்படுத்தும் கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கே தமது ஆதரவு என்று பேரம் பேச முனைகிறது.
கிட்டத்தட்ட ஆர்.எஸ்.எஸ். பாணியில், ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற எத்தனிக்கிறது. இன்னொரு பக்கத்தில், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைவதற்காகவே ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் கூட்டுச் சேரவுள்ளதாகவும், அதுபற்றிப் பேச்சு நடத்தப்படுவதாகவும் கடந்த வாரம் கூறியிருந்தார் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். அந்த அழைப்பை நிராகரித்து விட்டது. அத்தகைய பேச்சுக்கள் யாருடனும் நடத்தப்படவில்லை என்றும், சர்வதேச மட்டத்தில், கூட்டுச் சேரும் திட்டம் ஏதும் தமக்கு இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் ராம் மாதவ் தெரிவித்து விட்டார்.
ஆர்.எஸ்.எஸ்.ஐ கைக்குள் போட்டுக் கொண்டால், புதுடில்லியை கைக்குள் வைத்திருக்கலாம். இந்தியப் பிரதமரை விரைவில் சந்தித்து, பயனற்ற 13வது திருத்தச்சட்டத்தை நீக்குவது குறித்துப் பேசப் போவதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது இந்திய மத்திய அரசுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஆர்.எஸ்.எஸ். மூலம் பெற முனைந்துள்ளது பொதுபல சேனா.
இந்து தேசியவாத சக்தி என்பதால், இஸ்லாமிய தீவிரவாதத்தைக் காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் கூட்டுச் சேரலாம் என்று தப்புக்கணக்குப் போட்டு விட்டது பொதுபல சேனா.
இதேபோன்று தான், இலங்கையிலும், இந்துக்களை, தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் திருப்பிவிட முனைந்தது.
சிறுபான்மை மதத்தினரைப் பிரித்தாளும் பொதுபல சேனாவின் திட்டத்துக்கு இலங்கையிலுள்ள தமிழர்கள் குறிப்பாக இந்துக்கள் பலிக்கடாவாகத் தயாராக இல்லை.
ஆர்.எஸ்.எஸ். இந்த விடயத்தில் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்தது பொதுபல சேனா. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அதற்கு மறுத்து விட்டது, பொதுபல சேனாவுக்கு கிடைத்த பலத்த அடியாகும்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான போக்கை ஆர்.எஸ்.எஸ். கொண்டிருந்தாலும், பொதுபல சேனாவுடன் கூட்டுச் சேர அது தயாராக இல்லாதமைக்கு முக்கியமான காரணம், இந்தியாவுக்கு உள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய அச்சுறுத்தல் தான்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மிகச்சுலபமாகவே இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவுக்குள் பரவும் ஆபத்து இருந்து வருகிறது. ஏற்கனவே அல்கெய்தாவும், ஐ.எஸ் அமைப்பும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தக் கட்டத்தில், மிகவும் அவதானமாகவும் தந்திரமாகவும் நடந்து கொள்ளத் தவறினால், அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் உறுதிக்கும், பாதுகாப்புக்குமே ஆபத்தாக அமையும்.
எனவே, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து தேசியவாத அமைப்புகள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு விடயத்தில், அடக்கி வாசிக்கவே முனைகின்றன.
நரேந்திர மோடி அரசாங்கம், இஸ்லாமியர்களை அரவணைத்துச் செல்லவே முனைகிறது. குறுகிய காலத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் கணிசமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதற்கு, இந்த மாற்றமும் ஒரு காரணம்.
அதேவேளை, இலங்கையில் பொதுபல சேனா முன்னெடுக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையிலும், இந்தியாவிலும் பரவுவதற்கான இடைவெளியைத் தோற்றுவித்து விடும் என்று இந்தியப் பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.
மிக அண்மையில் கூட புதுடில்லியைத் தளமாக கொண்டு செயற்படும் Security Risks Asia என்ற அமைப்பின் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியுமான பிரிகேடியர் ராகுல் பொன்ஸ்லே, பொதுபல சேனாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிளவு, அதிகரித்துச் செல்வது, ஐ.எஸ் தீவிரவாதம் இலங்கையில் வேரூன்றுவதற்குக் காரணமாகி விடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் இருந்தாலும், இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் செயற்படுகின்றன.
ஆனால், பொதுபல சேனா, இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்பு என்ற கோஷத்தை எழுப்பி, இலங்கையில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க முனைகிறது. எனவே தான் பொதுபல சேனாவுடன் இணைய ஆர்.எஸ்.எஸ். மறுத்து விட்டது.
பொதுபல சேனாவின் இந்த முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு, பௌத்த மதத்தைப் பாதுகாக்கவோ, வலுப்படுத்திக் கொள்வதற்கோ பதிலாக, பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் வேரூன்றுவதற்குத்தான் காரணமாகப் போகிறது.
0 comments :
Post a Comment